350 கி.மீ வேகம், கடலுக்கு அடியில் பயணம்... நாளை அடிக்கல் நாட்டப்படும் புல்லட் ரயிலின் சிறப்புகள்!
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் பயணிகளுக்கு கடலுக்கு அடியில் பயணிக்கும் அனுபவத்தையும் வழங்கும்.
அகமதாபாத்: மும்பை - அகமதாபாத் இடையே அடிக்கல் நாட்டி தொடங்கப்பட உள்ள புல்லட் ரயில் மணிக்கு ரயில் 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது மட்டுமல்ல கடலுக்கு அடியில் பயணிக்கும் த்ரில்லான அனுபவத்தையும் வழங்க உள்ளது.
21ம் நூற்றாண்டில் உலகின் மிக உயர்ந்த ரயில் போக்குவரத்து பட்டியலில் இந்தியாவும் மும்பை அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் மூலம் அடியெடுத்து வைக்கிறது. நாட்டு மக்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புல்லட் ரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கிறது.
குஜராத்தின் சபர்மதி ஸ்டேஷனில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்கின்றனர். ஜப்பான் இந்த புல்லட் ரயில் திட்டத்திற்காக ரூ. 90,000 கோடி கடன் உதவி செய்துள்ளது.
320 கி.மீட்டரில் சீறிப்பாயும் ரயில்
அகமதாபாத் - மும்பை இடையே, 508 கி.மீ துாரத்துக்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில், மணிக்கு, 320 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த ரயில், சபர்மதி, வதோதரா உட்பட, 12 ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும். மொத்த வழித் தடத்தில், 92 சதவீத துாரம், மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும்.
கடலுக்கு அடியில்
6 சதவீதம் துாரம், சுரங்கப்பாதையாகவும், மீதமுள்ள 2 சதவீத துாரம், தரையில் பயணிக்கும் வகையிலும் இருக்கும். 21 கி.மீ துார சுரங்கப்பாதையில், 7 கி.மீ துாரம், கடலுக்கு அடியில் அமைகிறது. இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டு திட்டம்
ஆகஸ்ட் 15, 2022ல் இந்தியா 75 ஆண்டு சுதந்திரத்தை நிறைவு செய்யும் போது இந்த ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மும்பை அகமதாபாத் இடையேயான போக்குவரத்து தூரத்தை 7 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக இந்த புல்லட் ரயில் குறைக்கும்.
வேலைவாய்ப்பு
இந்த புல்லட் ரயில் திட்டம் மூலம் 20 ஆயிரம் பேர் நேரடி வேலைவாய்ப்பை பெறுவர். அதே போன்று 16 ஆயிரம் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். பிரதமர் மோடி ஆண்டுக்கு 1 கோடி வேலைவாய்ப்பு என்ற தேர்தல் வாக்குறுதியை இந்த திட்டம் நிறைவேற்றும் என்று கூறப்படுகிறது.
த்ரில் ரயில் பயணம்
மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும் புல்லட் ரயில் என்பதே பயணிகளுக்கு த்ரில்லான அனுபவம். அதிலும் இந்தியாவிலேயே முதன் முறையாக கடலுக்கு அடியில் பயணிக்கும் ரயில் என்ற சிறப்பையும் கொண்டது இந்த புல்லட் ரயில்.