உ.பி. சட்டசபை தேர்தல் வெற்றியும் கூட ராஜ்யசபாவில் பாஜகவுக்கு கை கொடுக்காது!
உ.பி. சட்டசபை தேர்தல் விஸ்வரூப வெற்றியும் கூட தற்போதைய நிலையில் ராஜ்யசபாவுக்கு எந்த பலனையும் தரப்போவதில்லை. 2020-ல்தான் பாஜக எம்.பிக்கள் நிலை கணிசமான அளவுக்கு உயரக் கூடும்.
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் விஸ்வரூப வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியானது ராஜ்யசபாவில் இப்போதும் அதிமுக, திரிணாமுல் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை சார்ந்தே இருக்கும் நிலைதான் நீடிக்கும்.
2014 லோக்சபா தேர்தலில் வென்று மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தாலும் ராஜ்யசபாவில் போதுமான எம்.பி.க்கள் இல்லாதது அக்கட்சிக்கு பெரும் கவலையாகத்தான் இருந்து வருகிறது. இதனால் ஜிஎஸ்டி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் திருத்த மசோதாக்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவதில் பெரும் முட்டுக்கட்டைகளை பாஜக எதிர்கொண்டு வருகிறது.
தற்போதைய நிலையில் 2018-ம் ஆண்டுதான் பாஜகவுக்கு தற்போதைய ராஜ்யசபா எம்.பி.க்கள் எண்ணிக்கையைவிட சற்று கூடுதலான எண்ணிக்கை கிடைக்கும். இருந்தபோதும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ராஜ்யசபாவில் அப்போதும் பெரும்பான்மை என்பது கிடைத்துவிடாது.
எவ்வளவு எம்.பி.க்கள்?
தற்போதைய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 77 எம்.பி.க்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 84 எம்.பிக்கள் உள்ளனர். இதர கட்சிகளுக்கு மொத்தம் 82 எம்.எபிக்கள் இருக்கின்றனர்.
அதிகபட்சம் 95 எம்பிக்கள்
உத்தரப்பிரதேசத்தில் விஸ்வரூப வெற்றி பெற்றுள்ள நிலையில் பாஜகவின் ராஜ்யசபா எம்பிக்கள் எண்ணிக்கை சற்று கூட இந்த வெற்றி கை கொடுக்கும். உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் மொத்தம் 31 ராஜ்யசபா எம்.எபிக்கள் உள்ளனர். இதில் 2018-ம் ஆண்டு 10 எம்.பி. இடங்களுக்கான தேர்தல் நடைபெறும். இவற்றில் பாஜகவுக்கு 7 எம்.பி.க்கள் கிடைக்கும். கோவா, மணிப்பூர் மாநில ராஜ்யசபா எம்.பிக்களுடன் சேர்த்து 2018-ம் ஆண்டு ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான எம்.பி.க்கள் எண்ணிக்கை 95 ஆக உயரும்.
காங்கிரஸுக்கு சரிவு
அதேநேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணியின் எம்.பிக்கள் எண்ணிக்கை 66 ஆக குறையும். இதர கட்சிகளின் எம்.பி.க்களின் எண்ணிக்கை 84 ஆக இருக்கும்.
2019-ல் வென்றாலும் கூட...
2019-2020 ஆம் ஆண்டு வரை பாஜக ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்ற அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் ஆதரவையே நம்பி இருக்க வேண்டும். 2019ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலிலும் பாஜக வென்றாலும் அடுத்த ஓராண்டுக்கு ராஜ்யசபாவில் மல்லுக்கட்டும் நிலைதான் இருக்கும்.
2020-ல் தான் ஓரளவு திருப்தி
2020-ம் ஆண்டுதான் ராஜ்யசபாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையை நினைத்துப் பார்க்கவே முடியும். அதுவும் அடுத்தடுத்து வரும் கர்நாடகா, குஜராத் மாநில தேர்தல்களில் கணிசமான வெற்றியைப் பெற்றால்தான் இதுவும் கூட சாத்தியம். இப்படியான வெற்றிகளை அடுத்தடுத்து பாஜக பெற்றால் அக்கட்சிக்கு 2020-ம் ஆண்டில் 81 எம்.பிக்கள் ராஜ்யசபாவில் இருப்பர். பாஜகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு 31 எம்.பிக்கள் என மொத்தம் 111 எம்.பிக்கள் கிடைக்கும்.
2020-லும் கூட...
காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் வெறும் 28 எம்.பிக்கள்தான் இருப்பர். அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்தால் மொத்தம் 56 எம்.பிக்கள் கிடைக்கும். இதர கட்சிகளுக்கு மொத்தம் 78 எம்.பிக்கள் இருப்பர். அப்போதும் கூட மசோதாக்களை எளிதாக நிறைவேற்ற 12 எம்.பிக்களைக் கொண்டிருக்கும் அதிமுகவின் தயவை நாட வேண்டிய நிலையில்தான் பாஜக இருக்கும். அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளின் ஆதரவு அப்போதும் பாஜகவுக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.