நர்ஸ்கள் உடை மாற்றும் அறையில் ரகசியக் கேமரா... மருத்துவமனை ஊழியர் கைது
டெல்லி: டெல்லி ராஜீவ்காந்தி புற்றுநோய் மருத்துவமனையில் செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் கேமராவை ஒளித்து வைத்துப் படம் பிடித்த ஊழியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உள்ளது ராஜீவ்காந்தி புற்றுநோய் மருத்துவமனை. இங்குள்ள செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் கடந்தவாரம் ரகசிய கேமரா ஒன்று ஒளித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடை மாற்றுவதற்காக வந்த ஆண் செவிலியர் ஒருவர், கேமரா இருப்பதைக் கண்டு பிடித்தார்.
உடனடியாக இந்த விவகாரம் உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. கேமராவும் அங்கிருந்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக பணி புரிந்து வரும் ஹரியானாவைச் சேர்ந்த சந்தீப் சர்மா என்ற ஊழியர் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து சந்தீப் சர்மாவைக் கைது செய்த போலீசார், அவரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர்.
உடை மாற்றும் அறையில் கேமரா கண்டுபிடிக்கப் படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வைக்கப்பட்டிருக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆயினும் அரசு மருத்துவமனை வளாகத்தில், அங்கு வேலை செய்யும் ஒருவரே செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் கேமராவை வைத்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.