துர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்! 'ஹைஅலர்ட்' பிறப்பிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துர்க்கா பூஜையை சீர்குலைக்க பாகிஸ்தான் சதி செய்துள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மேற்கு வங்கத்தில் ஹை அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மியான்மரை சேர்ந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை சட்ட விரோத குடியேறிகள் என கூறி அவர்களை தாய் நாட்டுக்கே திருப்பியனுப்பும் வேலைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது.
ரோஹிங்யா அகதிகள் மேற்கு வங்கத்தில் அதிகம் உள்ளனர். இதை சாதகமாக்கிக்கொண்டு, தீவிரவாத செயல்களை அம்மாநிலத்தில் அரங்கேற்ற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நவராத்தியின்போது நடைபெறும் துர்கா பூஜை வெகு பிரசித்தி. எனவே, இந்த நேரத்தில் இந்துக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி, இந்து-முஸ்லிம் பிரச்சினையை உருவாக்க பாகிஸ்தான் உளவுத்துறை திட்டமிட்டுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சமீபத்தில் இதுகுறித்த ஆலோசனை நடைபெற்றுள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன்பாக இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு முன்பாக, டெல்லியிலுள்ள பாக். தூதரகம், கொழும்புவிலுள்ள தனது தூதரகங்களில் பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியிருந்தது. இப்போது டாக்காவில் அந்த வேலையை பாகிஸ்தான் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
[நேதாஜி இன்னும் உயிரோடு இருக்கிறாரா? விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு]
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவது பாகிஸ்தான் நோக்கம். இதற்காக ஜமாத்-உல்-முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்களாம். இதையடுத்து மேற்கு வங்கத்தில் அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.