மண்டியா மாவட்டத்தில் மீண்டும் தமிழர் காலனி அமைக்க வேண்டும்: கர்நாடக ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியாவில் வசிக்கும் தமிழக மக்களுக்கு மீண்டும் குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அம்மாநில ஹைகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பெங்களூர்-மைசூர் நகரங்களுக்கு நடுவேயுள்ளது மண்டியா. இம்மாவட்டத்தில் கரும்பு விளைச்சல் அதிகம். எனவே பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கரும்பு வெட்ட இங்கு அழைத்து வரப்பட்டனர்.
கரும்பு தோட்டத்தில் பணியாற்றிய தமிழர்கள், காலியாக இருந்த நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருந்தனர். அது தமிழர் காலனி என்றே பெயர்பெற்றது. இதில் வசித்தோரில் பெரும்பான்மையினர் தலித் மக்களாகும்.
இந்நிலையில் 2008ம் ஆண்டு ஏற்பட்டதாக கூறப்பட்ட தீவிபத்தில் 500க்கும் மேற்பட்ட குடிசைகள் கருகின. பல லட்சம் மதிப்புள்ள உடைமைகள் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து தமிழர் காலனி மக்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பினர்.
அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த மகேஷ்வர்ராவ் 7.34 ஏக்கர் நிலத்தை குடிசை மாற்றுவாரியத்திற்கு ஒதுக்கி அதன் மூலம் தமிழர் காலனிவாசிகளுக்கு குடியிருப்பு ஏற்படுத்தி தர உத்தரவிட்டார்.
தமிழர் காலனிவாசிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் மண்டியா மருத்துவ கல்லூரியை சேர்ந்தது என கர்நாடக ஐகோர்ட்டில் எதிர் தரப்பு வழக்கு தொடர்ந்தது.
நீதிபதிகள் சுப்புராவ், கமல்முகர்ஜி மற்றும் நாகரத்தினம்மா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில், மண்டியா தமிழர் காலனி நிலம் மருத்துவ கல்லூரிக்கு சொந்தமானது. அந்நிலம் மருத்துவ கல்லூரிக்கு தேவைப்படும் என்பதால் அதில் வசிக்கும் தமிழர்களுக்கு வேறு இடத்தில் குடியிருப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடுகிறோம். இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழர் காலனியில் வசிக்கும் அனைவருக்கும் வீடு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.