மோடியின் கனவை நனவாக்குமா டிஆர்டிஓ?
பெங்களூரு: 35 வயதுக்குட்பட்ட இளம் விஞ்ஞானிகளிடம், நாட்டின் ஐந்து ஆய்வகங்களை டிஆர்டிஓ ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த டிஆர்டிஓ விழாவில் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
பிரதமரின் இந்தக் கனவை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் டிஆர்டிஓ முனைப்புடன் செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்போது இதைச் செய்யாவிட்டால் எப்போதுமே இதைச் செய்ய முடியாமல் போகும் என்பதையும் டிஆர்டிஓ புரிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
பிரதமரின் விருப்பம் என்னவென்றால் நாட்டில் 35 வயதுக்குட்பட்ட இளம் விஞ்ஞானிகளைக் கொண்டு இந்த ஆய்வகங்களை நடத்த வேண்டும் என்பதாகும்.
இதுகுறித்து டிஆர்டிஓ அமைப்பின் இயக்குநர் ஜெனரல் (ஏரோ) டாக்டர் கே. தமிழ்மணி ஒன்இந்தியாவிடம் தெரிவிக்கையில், இளம் விஞ்ஞானிகள் கையில் நாட்டின் முக்கிய ஆய்வகங்களை ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு டிஆர்டிஓவில் உள்ள இளம் விஞ்ஞானிகள் மத்தியில் பெருத்த ஆதரவு காணப்படுகிறது.
கடந்த காலத்திலும் கூட இதே போன்ற திட்டத்தை நாங்கள் பரீட்சித்துப் பார்த்துள்ளோம். தற்போது பிரதமரின் விருப்ப்பபடி இதில் முக்கிய கவனம் செலுத்தவுள்ளோம். இது மிகச் சிறந்த சிந்தனையாகும். செயலாக்கம், நிதி நிர்வாகம், நிர்வாக திறமைகள், தலைமைத்துவ திறமைகள் ஆகியவற்றைப் பரிசீலித்து இதை செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.
ரூ. 22 கோடி திட்டத்திற்குத் தலைமை தாங்கும் ஐஐடி பட்டதாரிகள்
மேலும் அவர் கூறுகையில், எதிர் வரும் மற்றும் புதிய திட்டங்கள், தொழில்நுட்ப ஆய்வுகளை டி மற்றும் இ அளவில் உள்ள விஞ்ஞானிகளிடம் ஏற்கனவே கொடுத்து வருகிறோம். இளம் விஞ்ஞானிகளுக்கு எப்போதுமே டிஆர்டிஓ ஆதரவாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஆக்ராவில் உள்ள ஏரியல் டெலிவரி ரிசர்ச் மற்றும் டெவலெப்மென்ட் அமைப்பை ஒரு ஐஐடி பட்டதாரிதான் தலைமை தாங்குகிறார். விமானங்களுக்கான எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி தொடர்பான திட்டம் இது. ரூ. 22 கோடி மதிப்பிலான திட்டம் இது. இதை அந்த ஐஐடி பட்டதாரிதான் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
அதேபோல, ரோட்டரி யுஏவி திட்டத்தையும், பெங்களூரில் உள்ள ஏரோநாட்டிக்கல் வளர்ச்சி நிறுவனம், அடா, செயல்படுத்துகிறது. அதையும் ஒரு இளம் ஐஐடி பட்டதாரியிடமே கொடுக்கவுள்ளோம் என்றார்.
டிஆர்டிஓ செய்தித் தொடர்பாளர் ரவி குப்தா ஒன்இந்தியாவிடம் பேசுகையில், முக்கியமான திட்டங்களில் ஒருபோதும் இளைஞர்களை நாங்கள் புறக்கணித்ததே இல்லை. பல முக்கியத் திட்டங்களில் இளைஞர்கள் திட்ட இயக்குரந்களாக உள்ளனர். ஹைதராபாத்தில் கூட, டாக்டர் சதீஷ் ரெட்டி, டாக்டர் டெஸ்ஸி தாமஸ் ஆகியோர் இமாரத் ஆய்வகம் மற்றும் அட்வான்ஸ் சிஸ்டம் லேபரட்டரிக்குத் தலைமை வகிக்கின்றனர்.
அதேசமயம், பிரதமரின் விருப்பம், இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியை கண்டிப்பாக தரும் என்பதில் ஐயமில்லை என்றார்.
மோடியின் ஐடியா பிரமாதம்.. செயல்படுத்துவது கடினம்
இதற்கிடையே, ஏவியேஷன் வரலாற்று ஆசிரியரும், பிரபல எழுத்தாளருமான புஷ்பீந்தர் சிங் இதுகுறித்துக் கூறுகையில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையில் உலக முன்னோடியாக மாறுவதற்கான முயற்சிகளை டிஆர்டிஓ எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. டிஆர்டிஓவுக்கள்ளேயே கூட பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
தற்போது உள்ள அமைப்புப் படி இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பது கடினம். மோடியின் நோக்கம், யோசனை சிறப்பானது. ஆனால் அதை தற்போதுள்ள அமைப்பின் கீழ் செயல்படுத்துவது கடினமாகும். அதிகாரவர்க்கத்தைத் தாண்டி நாம் இதைச் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மோடி தனது நோக்கங்களை, யோசனைகளை செயல்படுத்த வேண்டுமானால், டிஆர்டிஓவை தனியார்மயமாக்க வேண்டும். அப்போது மிகப் பெரிய, மாஜிக் போன்ற மாற்றங்களை நிச்சயம் நாம் காண முடியும். இ்லலாவிட்டால் பழைய கதையே தொடரும் என்றார்.
புதிய ஆய்வகங்களை ஏற்படுத்தலாம்
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு டிஆர்டிஓ இயக்குநர் கூறுகையில், நாட்டின் சில ஆய்வகங்களை இளைஞர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற பிரதமரின் விருப்பம் நிறைவேறுவது கடினமாகும். இந்த யோசனை சிறந்ததாக இருந்தாலும் கூட, அப்படித் தோன்றினாலும் கூட, அதில் செயல்முறை பிரச்சினைகள் நிறைய உள்ளன.
டி அல்லது இ அளவில் உள்ள விஞ்ஞானியிடம் முக்கிய ஆய்வகத்தைக் கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல, எளிதானதல்ல. அப்படி வரும் பட்சத்தில், அவர்களை மூத்த விஞ்ஞானிகள், இவர்களுக்குக் கீழ் பணியாற்றும் நிலை ஏற்படலாம். அது தேவையில்லாத குழப்பத்தையும், பிரச்சினைகளையுமே ஏற்படுத்தும்.
ஒருவேளை இந்த சூழலை உருவாக்குவதாக இருந்தாலும் கூட யாருக்கும் பிரச்சினை வராத வகையில் உருவாக்க வேண்டும். பிரதமரின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமானால், புதிதாக ஐந்து ஆய்வகங்களை ஏற்படுத்தி அதை இளைஞர்கள் கையில் கொடுக்கலாம். இந்த ஐந்து ஆய்வகங்களும், டிஆர்டிஓ டைரக்டர் ஜெனரலிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்வது போல உத்தரவிடலாம். அப்போதுதான் குழப்பம் வராது என்றார் அவர்.
பிரதமர் தனது பேச்சின்போது குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் இவைதான்:
- டிஆர்டிஓவி்ல் உள்ள இளம் விஞ்ஞானிகளுக்காக ஐந்து ஆய்வகங்களைக் கண்டறியுங்கள்.
- இங்கு முற்றிலும் 35 வயதுக்குட்பட்ட விஞ்ஞானிகளே பணிபுரிய வேண்டும்.
- இந்த ஆய்வகங்களில் அனைத்து முக்கிய முடிவுகளையும் இவர்களே எடுக்க வேண்டும்.
- மற்றவர்களை விட டிஆர்டிஓ வளர்ச்சி அடைந்த அமைப்பாக உருவெடுக்க வேண்டும்.
- மற்றவர்களை விட நம்மிடம் அதிக திறமை உள்ளது. காலத்தையும் தாண்டியவர்களாக நாம் பணியாற்ற வேண்டும்.
- நமது படை வீரர்களின் வாழ்க்கையை இலகுவாக்கும் விஷயங்களை டிஆர்டிஓ உருவாக்க வேண்டும்.
- நமது பல்கலைக்கழகத்தில் பயிலும் இளைஞர்களை கவரும் வகையில் டிஆர்டிஓ வி்ஞ்ஞானிகள் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார் மோடி.
இந்த நிலையில் ஓய்வுக் காலத்தையும் தாண்டி பணியாற்றி வந்த நான்கு விஞ்ஞானிகளின் பதவிநீட்டிப்பு கோரிக்கையை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது. இது நிச்சயம் டிஆர்டிஓ தலைமைக்கு அதிருப்தியைத் தரலாம்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற டிஆர்டிஓ இயக்குநர் ஒருவர் கூறுகையில், விஞ்ஞானிகளுக்கு ஓய்வு வயது 60 என்பது சரியல்ல. வெளிநாடுகளில் 70 வயதைக் கடந்தும் கூட பலர் பணியாற்றுகிறார்கள். இது விவாதத்துக்குரிய விஷயமாகும். நமது மூத்த விஞ்ஞானிகளின் திறமையை நாம் முடிந்த வரை பயன்படுத்த வேண்டும் என்றார்.
இந்த இயக்குநர் 60 வயதைக் கடந்த பின்னர் இரண்டு முறை (மொத்தம் நான்கு ஆண்டுகள்) பதவி நீட்டிப்புப் பெற்றவர் ஆவார்.
ஆனால் டிஆர்டிஓவில் இளைஞர்கள் பெரும் பங்காற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். அந்த எதிர்ராப்புக்கேற்றார் போல டிஆர்டிஓ தலைமை செயல்படுமா என்பது காத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும்.