ரூ.2 கோடி லஞ்சம்... சசிகலா உள்ள பெங்களூரு சிறையில் நாளை உயர்நிலை குழு ஆய்வு
பெங்களூர்: சிறப்பு வசதிகள் கிடைக்க சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து பெங்களூர் சிறையில் நாளை உயர் நிலை குழுவினர் ஆய்வு நடத்தவுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த சிறையில் கடந்த வாரம் சிறைத் துறை டிஐஜி ரூபா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சசிகலா அறையில் தனி சமையலறை, சிறையில் அவரை சந்திக்க வரும் வாடிக்கையாளர்களுக்கென்று தனி அறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ரூபாவுக்கு தெரியவந்தது. மேலும் சிறப்பு வசதிகளுக்காக சிறைத் துறை டிஜிபி உள்பட சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி கப்பம் கட்டியதாகவும் அவருக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அதை புகாராக எழுதி மாநில டிஜிபிக்கு ரூபா அனுப்பியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து முதல்வர் சித்தாராமையா சிறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வினய் குமார் தலைமையிலான உயர் நிலை குழுவினர் நாளை பரப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு செய்யவுள்ளார்.