பிருந்தாவனத்தில் கிருஷ்ணருக்கு ரூ. 300 கோடியில் கோவில் – ”இஸ்கான்” குழு அடிக்கல்!
மதுரா: உத்தர பிரதேச மாநிலத்தின் மதுரா அருகே பிருந்தாவனத்தில் கிருஷ்ணருக்கு மிகப்பெரிய கோவில் அமைக்கப்பட உள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினரான "இஸ்கான்" அமைப்பினர் உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே பிருந்தாவனத்தில் கிருஷ்ண பகவானுக்காக மிகப்பெரிய கோவிலை ரூபாய் 300 கோடி செலவில் கட்ட முடிவு செய்து உள்ளனர்.
"பிருந்தாவன் சந்திரோதய மந்திர்" என்று அழைக்கப்படும் இந்த கோவிலின் உயரம் 700 அடியாக இருக்கும். கோவில் கட்டி முடிக்கப்படும் போது இது உலகில் உள்ள எல்லா கோவில்களையும் விட மிக உயரமானதாக இருக்கும்.
இந்த கோவிலின் அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி நடந்தது. மேலும் நேற்று கோவிலில் நடந்த அனந்த சேஷ ஸ்தாபன பூஜையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கிவைத்தார்.
கோவிலின் விசேஷ பூஜையை நேற்று தொடங்கி வைத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில், "ஆன்மிக நெறிமுறைகளை இந்த உலகிற்கு தெரிவிக்கும் புகழ் பெற்ற மையமாக இந்த பிருந்தாவன் கோவில் திகழும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த கோவிலை மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் ஆன்மிக சுற்றுலா மையமாக திகழ்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.