விலைவாசி உயர்வு எதிரொலி.. சில்லறை பணவீக்க விகிதம் 7.35%ஐ தொட்டது.. 5 வருடங்களில் இல்லாத உயர்வு!
கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் சில்லறை பணவீக்க விகிதம் 7.35% ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி: கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் சில்லறை பணவீக்க விகிதம் 7.35% ஆக உயர்ந்துள்ளது. ஆர்பிஐ உத்தேசித்து இருந்த அளவை விட இது அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில வருடமாக சில்லறை பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016ல் இருந்தே இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் வேகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த நவம்பரில் 5.54 சதவீதமாக உயர்ந்தது.
தற்போது மீண்டும் சில்லறை பணவீக்க விகிதம் 2019 டிசம்பர் மாதத்தில் 7.35% ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் விலைவாசி உயர்வு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதான் சில்லறை பணவீக்க விகிதம் உயரவும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019 இறுதியில் சில்லறை பணவீக்க விகிதமாக அதிகபட்சம் 6% ஆக இருக்கலாம் என்று ஆர்பிஐ கணித்து இருந்தது. ஆனால் அதையும் மீறி பண வீக்கம் அதிகரித்துள்ளது.
காய்கறி விலைவாசி உயர்வுதான் இந்த மொத்த பணவீக்க உயர்விற்கு காரணம். கடந்த வருடம் முழுக்க காய்கறி விலைகள் 60.5 சதவிகிதம் வரை உயர்ந்தது. டிசம்பரில் இது அதிகமாக இருந்தது. அதேபோல் தானியங்கள் விலை 15.44% அதிகரித்தது.
மாமிசம், மீன் விலை 9.57% உயர்ந்தது. முட்டை விலை 8.79% உயர்ந்தது. இதுதான் சில்லறை பணவீக்க விகிதம் 7.35% ஆக உயர காரணம். இதனால் இந்த வருட தொடக்கத்திலும் சில்லறை பணவீக்க விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.