அயோத்தியில் ராமர் கோயில்...பொன்னான நாள்...பிரதமர் மோடி பேச்சின் ஹைலைட்ஸ்!!
அயோத்தி: இந்திய வரலாற்றில் இன்று ஒரு பொன்னான நாள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பின்னர் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். அப்போது அயோத்தியின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ராமர் கோயில் ஏற்படுத்தும் என்று புகழாரம் சூட்டினார்.
Recommended Video
அயோத்தியில் இன்று வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பிரதமர் மோடி வெள்ளியிலான முதல் செங்கல்லை எடுத்துக் கொடுத்தார். முன்னதாக வேத மந்திரங்கள் ஓத அயோத்தியே ஒளி வெள்ளத்தில் மிதந்தது. பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
விழாவில் மோடி பேசுகையில், ''ஆகஸ்ட் 15 போல், ராமர் கோயில் எழுப்ப வேண்டும் என்று போராடி வந்தவர்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாள். அயோத்தியின் பொருளாதாரத்தில் ராமர் கோயில் முக்கிய பங்கு வகிக்கும். ஆகஸ்ட் 5ஆம் தேதி ஒரு பொன்னாள் ஆகும். ராம ஜென்ம பூமி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
நல்ல விசயங்களை தாமதம் செய்யக்கூடாது... அயோத்தி பூமி பூஜையில் கம்பராமாயணத்தை குறிப்பிட்ட மோடி
- பல ஆண்டுகளாக குடிசையில் இருந்த ராமருக்கு இனி பெரிய கோயில் அமைய இருக்கிறது.
- வரலாற்று சிறப்பு நிகழ்வில் நான் கலந்து கொள்ள அழைத்து இருப்பது நான் செய்த பாக்கியம், அதிர்ஷ்டம். கன்னியாகுமரியில் இருந்து ஷிர்பவானி, கொட்டேஷ்வரில் இருந்து காமாக்யா, ஜெகன்னாத்தில் இருந்து கேதர்நாத், சோம்நாத்தில் இருந்து காசி விஸ்வநாத் என்று இன்று நாட்டின் அனைத்து இடங்களும் ராமர் நம்பிக்கையில் மூழ்கியுள்ளது.
- இன்று ராமர் கோயில் கட்டுவதன் மூலம் வரலாறு ஏற்படுத்தப்படவில்லை. வரலாறு திரும்புகிறது. எப்படி படகு ஓட்டியில் இருந்து பழங்குடியினர் வரை ராமருக்கு உதவினார்களோ, எப்படி குழந்தைகள் கோவர்த்தன மலையை தூக்குவதற்கு கடவுள் கிருஷ்ணருக்கு உதவினார்களோ அதுபோல ஒவ்வொருவரின் உதவியுடன் ராமர் கோயில் எழுப்பப்படும்.
- இந்தியா வரலாற்றில் அயோத்தி இன்று பொன்னான நாளை துவக்கியுள்ளது. பல ஆண்டுகளாக காத்திருந்ததற்கு இன்று முடிவு கிடைத்து இருக்கிறது.
- நமது நாட்டின் அடையாளமாக, பக்தியாக, தேசிய உணர்வாக இன்றைய நாள் பார்க்கப்படுகிறது. பல கோடி மக்களின் முடிவுகளுக்கு, தீர்மானத்துக்கு அடையாளமாக, அங்கீகாரமாக உள்ளது. எதிர்கால சந்ததிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.
- ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை இன்று உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. நாட்டு மக்களுக்கும், உலக அளவில் இருக்கும் ராமர் பக்தர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- இந்திய காலாச்சாரத்தை பண்பாட்டை பிரதிபலிப்பதாக ராமர் கோயில் அமையும். மனித குலம் இருக்கும் வரை இந்த உணர்வு எதிரொலிக்கும்'' என்றார்.