29 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அயோத்திக்கு வருகை தந்த பிரதமர் மோடி.. மேலும் சில சுவாரஸ்யங்கள்
அயோத்தி: 29 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அயோத்திக்கு வந்துள்ளார். இவர் தங்க நிறத்திலான குர்தாவையும் வெள்ளை நிற வேட்டியையும் அணிந்து கொண்டு அயோத்தியில் வெள்ளி செங்கல்லை நட்டு வைக்கவுள்ளார் உள்பட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யங்களை பார்ப்போம்.
Recommended Video
அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடம் இத்தனை நாட்களாக சர்ச்சைக்குரியதாக இருந்தது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தது. மேலும் ராமர் கோயிலை கட்டுவதற்கும் அனுமதி அளித்தது.
இன்று ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறுகிறது. இதில் வெள்ளி செங்கல்லை எடுத்துக் கொடுத்து கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்காக அவர் டெல்லியிலிருந்து அயோத்திக்கு தனி விமானத்தில் வந்தடைந்தார்.
120 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டம்.. அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைவது எப்போது தெரியுமா?
தங்க நிறம்
பிரதமர் நரேந்திர மோடி தங்க நிறத்தினாலான குர்தாவையும் வெள்ளை நிற வேஷ்டியையும் அணிந்துள்ளார். அவர் 40 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கல்லை நடுகிறார். இந்த விழாவையொட்டி அயோத்தியே விழா கோலம் பூண்டது. லக்னோ வந்துள்ள மோடி முதலில் அனுமன் கோயிலில் பிரார்த்தனை செய்கிறார். பின்னர் அங்கிருந்து ராமர் ஜென்ம பூமிக்கு செல்கிறார்.
அயோத்தி
பிரதமர் நரேந்திர மோடி 29 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அயோத்திக்கு வந்துள்ளார். 1990 ஆம் ஆண்டு ராமர் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் ஒருங்கிணைந்தவர்களில் மோடியும் ஒருவர். இந்த கோயிலின் மாதிரி வடிவம் கடந்த திங்கள்கிழமை வெளியானது. அதில் 3 அடுக்குகளை கொண்டு வடிவமைக்கும் கோயிலில் தூண்கள், மாடங்கள் காணப்படும். கோயிலின் உயரம் 161 அடியாகும்.
கொரோனா முன்னெச்சரிக்கை
இந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மட்டும் அல்லாமல் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மோகன் பாகவத் உள்பட 50 விஐபிக்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த இடபிரச்சினைக்கு வழக்கு தொடுத்த இக்பால் அன்சாரிக்கு முதல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக எல் கே அத்வானி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த காட்சிகளை பார்ப்பார். கடைசி நேரத்தில் முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
5 ஏக்கர் நிலம்
2.77 ஏக்கர் இடத்தில் இந்த கோயில் கட்டப்படுகிறது. அயோத்தியில் வேறு ஒரு இடத்தில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்த விழாவுக்கு வருகை தரவில்லை. இந்த கோயிலில் உள்ள அர்ச்சகர் மற்றும் 14 போலீஸாருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. கோயில் பூமி பூஜைக்கு இந்தியா முழுவதும் 2000 புனித தலங்களிலிருந்து மணலும், 100க்கும் மேற்பட்ட புனித ஆறுகளிலிருந்து தண்ணீரும் வரவழைக்கப்பட்டுள்ளது.