இமாச்சலத்தில் கோர விபத்து... பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 18 பேர் பலி
இமாச்சல் : தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையில் விழுந்து நொறுங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இமாச்சல பிரதேச மாநிலம் ரெகோங் பியோ என்ற இடத்தில் இருந்து ராம்பூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தியா-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் மலை மீது நாத்பா என்ற இடத்தில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து 200 மீட்டர் ஆழ பள்ளத்தில் உருண்டு சட்லெஜ் ஆற்றின் கரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலும், 3 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். 12 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் இருவர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.
விபத்துக்குள்ளான பேருந்து முன்னே சென்றுகொண்டிருந்த மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.