இமாச்சல பிரதேசத்தில் நாளை சட்டசபை தேர்தல்- காங்.- பாஜக இடையே கடும் போட்டி
இமாச்சல பிரதேச சட்டசபைக்கான தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது.
சிம்லா: 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கான தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தம் 337 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 62 பேர் சிட்டிங் எம்.எல்.ஏக்கள்.
முதல்வர் வீர்பத்ர சிங், 10 அமைச்சர்கள், துணை சபாநாயகர் ஜகத் சிங் நெகி, பாஜகவின் முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமல், 12 முன்னாள் அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.
மோடி, அமித்ஷா, ராகுல்
12 நாட்கள் உச்சகட்டமாக நடைபெற்ற பிரசாரம் நேற்று முடிவுக்கு வந்தது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தனர். பாஜகவைப் பொறுத்தவரை ஊழலை முன்வைத்து பிரசாரம் செய்தது. காங்கிரஸோ ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சுட்டிக்காட்டி பிரசாரம் மேற்கொண்டது.
அதிருப்தி பெண் வேட்பாளர்கள்
தர்மசாலா தொகுதியில் அதிகபட்சமாக 12 பேர் ஜஹான்தத்தா தொகுதியில் போட்டியிடுகின்றனர். மொத்தம் 19 பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். பாஜக 6 பெண்களையும் காங்கிரஸ் 3 பெண்களையும் அதிகாரப்பூர்வ வேட்பாளாக நிறுத்தியுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ், பாஜகவின் அதிருப்தி வேட்பாளர்களாக 7 பெண்களும் களத்தில் குதித்துள்ளனர்.
சட்டசபை நிலவரம்
தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி 35; பாஜக 28 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கிறது. 4 பேர் சுயேட்சைகள். ஒரு இடம் காலியாக இருக்கிறது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் மும்முரமாக உள்ளன. நாளை நடைபெறும் தேர்தலில் மொத்தம் 50,25, 941 பேர் வாக்காளிக்க உள்ளனர். மொத்தம் 7,525 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 37,605 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
68 துணை ராணுவ கம்பெனிகள்
இத்தேர்தலுக்காக 17,850 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரும் மத்திய துணை ராணுவப் படையின் 65 கம்பெனிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2307 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா வசதி பொருத்தப்பட்டுள்ளது.