உ.பி.யில் பயங்கரம்... பத்திரிகையாளர், சகோதரர் சுட்டுப் படுகொலை!
சஹாரன்பூர்: உத்தரப்பிரதேசத்தில் இந்தி நாளிதழில் போட்டோகிராபர் மற்றும் அவரது சகோதரர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டைனிக் ஜாக்ரன் இந்தி நாளிதழின் போட்டோகிராபராக பணியாற்றிய ஆஷிஸ் (வயது 23) மற்றும் அவரது சகோதரர் அஷூதோஸ் ஆகியோருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மகிபால் சைனி குடும்பத்துக்கும் மாட்டு சாணம் அள்ளுவது உள்ளிட்டவைகளில் பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நேற்று காலை இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திடீரென ஆஷிஸ் மற்றும் அஷூதோஸ் இருவரையும் மகிபால் மற்றும் அவரது மகன்கள் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான மகிபால் குடும்பத்தினரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதுடன் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.