இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை வெறும் 26 சதவீதம்தான்!- இது சென்சஸ் கணக்கு
டெல்லி: பொது மொழி என்றோ, தேசிய மொழி என்றோ ஏதும் இல்லாத, 125 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை மட்டும் 26 சதவீதம்தான்.
இந்தக் கணக்கைச் சொல்வது நாமல்ல, மத்திய அரசு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பான சென்சஸ்!
இந்தி பேசுவோர்
2001-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை என்று 42 கோடி பேரைக் கணக்கு காட்டியிருந்தனர். அதாவது 45 சதவீதம் பேர்.
ஐந்தாவது இடம் தமிழுக்கு
வங்காளம், தெலுங்கு, மராத்தி மொழி பேசுவோருக்கு அடுத்து அதிகம் பேர் பேசும் மொழி தமிழ்தான். தமிழ் பேசுவோர் என 6 கோடியே 7 லட்சம் பேர் எனப் பதிவு செய்திருந்தனர்.
மத்திய அரசின் மோசடி
இது ஒருபுறம் இருக்க, இந்தி மொழி பேசுவோர் என்று மத்திய அரசு கணக்கு காட்டியிருப்பது ஒரு மோசடியான வேலை என்பது அம்பலமாகியுள்ளது.
காரணம், இந்த 42 கோடி ப்ளஸ் மக்களும் இந்தி பேசுபவர்கள் அல்ல.. வெவ்வேறு மாநிலங்களில் இந்தியின் கிளை மொழிகளைப் பேசுபவர்கள்.
26 சதவீதம்தான்
இந்தியை மட்டும் பேசுவோர் எண்ணிக்கை என்று பார்த்தால் 27 கோடியே 79 லட்சம் பேர். அதாவது நாட்டு மக்கள் தொகையில் 26 சதவீதம். இந்தி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளான போஜ்புரி, ராஜஸ்தானி, மகதி, சத்தீஸ்கரி, ஹரியான்வி, மேவாரி, மால்வி, மார்வாரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவோர் 15 கோடிக்கு மேல் உள்ளனர். இவை வட்டார வழக்கு மொழிகள் அல்ல. தனி எழுத்துருக்களைக் கொண்டவை. இந்த மொழி பேசுவோர் தங்கள் தாய்மொழி இந்தி என்று சொல்வதில்லை. அந்தந்த மாநிலங்களில் தாய் மொழியாக தங்கள் மொழிகளையே குறிப்பிடுகின்றனர்.
குற்றச்சாட்டு
ஆனால் இதை மறைத்துவிட்டு, மொத்தமாக இந்தி பேசுபவர்கள் 42 கோடி பேர் என கணக்கு சொல்கிறது மத்திய அரசு. இதன் மூலம் பெரும்பான்மையோர் பேசும் மொழி இந்தி என்ற மாயத்தை உருவாக்குகிறது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.
முரண்பாடு
"இந்திய மக்கள் தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்பது நீண்ட காலமாக விவாதத்துக்குரியதாக உள்ளது. இந்தியின் சாயலில் உள்ள மொழிகளை வட்டார வழக்கு மொழிகளாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால் அந்த மொழிகளைப் பேசுவோர் அவற்றை தங்கள் தனித்துவம் மிக்க தாய் மொழி என்கிறார்கள். இந்த முரண்பாடு நீங்கும் வரை இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையான கணக்கு கிடைக்காது," இந்திய மொழிகள் கணக்கெடுப்புத் துறைத் தலைவர் ஜிஎன் டெவி.