நேதாஜி அப்பவே சொன்னார் உங்களை பற்றி.. இது மமதா! அறிவு காலி உங்களுக்கு.. இது இந்து மகாசபா!
கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளான இன்று, அவரை முன்வைத்து, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் இந்து மகாசபா ஆகியவற்றுக்கிடையே பெரும் கருத்து மோதல் உருவாகியுள்ளது.
1897 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி சுபாஷ் சந்திரபோஸ், அப்போதைய வங்காள மாகாணம், ஒரிசா டிவிஷனில் பிறந்தார். சுதந்திர போராட்ட வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவரான நேதாஜிக்கு இன்று 123வது பிறந்த நாள் விழா என்பதால் கோலாகலமாக நாடு முழுக்க கொண்டாடப்பட்டது.
கொல்கத்தாவில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில், பங்கேற்ற, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி தனது பேச்சின்போது கூறியதாவது:
இந்து மகாசபையின் பிரித்தாளும் அரசியலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடுமையாக எதிர்த்தார். மதசார்பின்மை கொண்ட இந்தியாவாக இருக்க வேண்டும் இந்த நாடு என்று அவர் விரும்பினார். இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்தார்.
இவரது கருத்துக்கு இந்து மகாசபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் சுவாமி சக்கரபாணி என்பவர் அளித்துள்ள பேட்டியில்,
"உண்மை என்னவென்றால், ஆசாத் ஹிந்த் ஃபாஜை ஸ்தாபிக்க நேதாஜியை வற்புறுத்துவதில் இந்து மகாசபா மற்றும் வீர் சாவர்க்கர் முக்கிய பங்கு வகித்தார்கள்.
நாங்கள் இருவரும் இந்த தேசத்தின் மீது அன்பைப் பகிர்ந்து கொண்டோம். இன்று, மம்தா பானர்ஜி மிக மோசமான அளவுக்கு கீழே இறங்கி அரசியல் செய்துள்ளார். ஏனென்றால் தற்போதைய நிலையில், எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து திறமையையும் அவர் இழந்துவிட்டார். மமதா 'அறிவு திவால்' ஆகிவிட்டார். லாலா லஜபதி ராயின் இந்து மகாசபாவை இழிவுபடுத்துவதற்கு அவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.