மகாத்மா காந்தி படுகொலைநாளை "ஆட்டம் பாட்டத்துடன்" "கொண்டாடி" மகிழ்ந்த இந்துமகாசபை கும்பல்!!
மீரட்: தேசத்தின் தந்தை அண்ணல் மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளை நாடே அனுசரித்துக் கொண்டிருக்கிறது... ஆனால் இந்துமகாசபை என்ற கும்பல் மட்டும் ஆட்டம், பாட்டத்துடன் இந்த துயரநாளை 'கொண்டாடி' மகிழ்ந்திருக்கிறது.
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் இந்துத்துவா வெறியரான நாதுராம் கேட்சேவால் டெல்லியில் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30 சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கேட்சே, இன்றைய இந்துத்துவா அமைப்புகளின் முன்னோடிகளான இந்து மகாசபை மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்.
தேசத்தின் தந்தையை படுகொலை செய்த கோட்சே 1949-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி தூக்கிலிட்டு தண்டிக்கப்பட்டார். காந்தியடிகள் நினைவுநாளை நாடு இன்று அனுசரித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் கோட்சே ஆதரவாளர்களான இந்து மகாசபையில் இந்நாளை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் காந்தி படுகொலை நாளை பெருவிழாவாக கொண்டாடியுள்ளனர் இந்து மகாசபையினர். இது தொடர்பாக இந்து மகா சபையின் தேசிய துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா கூறுகையில், தேசத்தின் ஹீரோ நாதுராம் கோட்சேவால் காந்தி சுட்டு வீழ்த்தப்பட்ட நாளை நாங்கள் கொண்டாடி மகிழ்கிறோம். இன்றைய நாளில் ஆட்டம், பாட்டம் என இனிப்புகளுடன் மகிழ்வாகக் கொண்டாடுகிறோம்.
எங்களுக்கு ஜனவரி 30-ந் தேதி என்பது ஒரு பண்டிகை நாள். இந்தியா ஒரு இந்துராஷ்டிரம். இந்த தேசத்தின் ஹீரோ காந்தி அல்ல... எங்களது கோட்சேதான். காந்தியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றிய தேசப்பற்றாளர் கோட்சே... மாவீரர் கோட்சே என்றார்.
இந்துமகாசபையினர்தான் நாடு முழுவதும் கோட்சே சிலைகளை வைக்கப் போவதாக மிரட்டலும் விடுத்திருந்தனர். கடந்த வாரம் முன்னர் நாட்டின் குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதியை கருப்பு தினமாகவும் கடைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.