காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு கோயில்... அடிக்கல் நாட்டியது இந்து மகாசபை!
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு இந்து மகாசபையினர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளனர்.
குவாலியர்: மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு இந்து மகாசபையினர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளனர்.
இந்து மகாசபையினர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட குவாலியர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதனால் இந்து மகாசபையினர் டௌலத்கஞ்சில் உள்ள தங்களது அலவலகத்திலேயே கோட்சேவிற்கு கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளனர். இந்து மகாசபை அலுவலகத்தில் கோட்சேவின் சிலை நிறுவப்பட்டு அதற்கு நேற்று மலர் தூவி மரியாதையும் செலுத்தப்பட்டுள்ளது.
கோட்சே தூக்கிலிடப்பட்ட தினம்
காந்தியை கொன்ற வழக்கில் மரணதண்டணை அளிக்கப்பட்டு, அம்பாலா சிறையில் நவம்பர் 15, 1949ல் கோட்சே தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். அன்றைய தினத்தை இந்து மகாசபையினர் 'தியாக தினமான' அனுசரிக்கின்றனர்.
இந்து மகா சபை மரியாதை
இதனையொட்டியே நேற்று குவாலியர் அலுவலகத்தில் கோட்சேவிற்கு மரியாதையும் செய்யப்பட்டுள்ளது. கோட்சேவின் படத்திற்கு இந்து மகாசபையினர் மரியாதை செய்யும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
சொந்த அலுவலகத்திலேயே திறப்பு
இந்துமகாசபையை சேர்ந்த ஜெய்வீர் பரத்வாஜ் இது குறித்து கூறும் போது, கோட்சேவிற்கு கோயில் கட்ட நிலம் ஒதுக்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனையடுத்தே டௌலத்கஞ்ச் பகுதியில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
முதல்வர் மறைமுக ஆதரவா?
இந்து மகாசபையின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் மறைமுகமாக இந்து மகாசபைக்கு ஆதரவு தெரிவிப்பதாக எதிர்க்கட்சியை சேர்ந்த அஜய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் சவுகான் உதட்டில் மட்டுமே காந்தியின் பெயர் உச்சரிக்கப்படுகிறது, ஆனால் அவரது உள்ளத்தில் கோட்சே தான் இருக்கிறார். அப்படி இல்லை என்றால் எப்படி இந்து மகாசபையினர் இப்படி வெளிப்படையாக கோட்சேவிற்கு கோவில் கட்ட அடிக்கல் நாட்டி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.