குத்தாட்டம் போடும் நடிகைகளை விலை மாதுக்கள் என அறிவிக்கணும்: இந்து மகாசபை தலைவர்
டெல்லி: படங்களில் அரைகுறை ஆடை அணிந்து குத்தாட்டம் போடும் நடிகைகளை விலைமாதுக்கள் என்று அறிவிக்க வேண்டும் என உத்தர பிரதேச மாநில இந்து மகாசபையின் பொதுச் செயலாளர் நவீன் தியாகி கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநில இந்து மகாசபையின் பொதுச் செயலாளர் நவீன் தியாகி. அவர் அரைகுறை ஆடை அணிந்து குத்தாட்டம் போடும் நடிகைகளை விலைமாதுக்கள் என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாணவிகள் பள்ளிகளுக்கு ஜீன்ஸ், சட்டை அணியவும், செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
படங்களில் குத்தாட்டம் போடும் நடிகைகள், ஆடைகளை அவிழ்க்கும் நடிகைகளை விலைமாதுக்கள் என்று அறிவிக்க வேண்டும். ஆபாசமான செயல்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் பெண்களை விலைமாதுக்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். அவர்கள் சமூகத்தில் அழுக்கை பரப்புகிறார்கள். இந்த விவகாரத்தை நான் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வேன் என்றார்.
தியாகியின் கருத்து பற்றி இந்து மகாசபையின் தேசிய தலைவர் ஸ்வாமி சக்ரபாணி கூறுகையில்,
இது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. விவரங்கள் கேட்டுள்ளோம். தியாகி இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதை யாரும் தடுக்கவில்லை என்றார்.
தியாகியின் கருத்துக்கு பெண்கள் அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.