இந்துத்துவா அமைப்புகளிடையே உச்ச மோதல்: 'ஆர்.எஸ்.எஸ்.' துரோகங்களை அம்பலப்படுத்தும் இந்துமகா சபை!!
மீரட்: இந்துத்துவா அமைப்புகளிடையே கடுமையான குடுமிபிடி சண்டை வெடித்துள்ளது. காந்தி படுகொலையைத் தொடர்ந்து தாய் அமைப்பான தங்களை காட்டிக் கொடுத்து நேருவுடன் கை கோர்த்துக் கொண்ட பச்சை துரோக இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்று இந்து மகாசபை சாடியுள்ளது.
மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் நவம்பர் 15. இந்நாளை வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடித்தது இந்து மகா சபை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் எம்.எஸ். வைத்யா, கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக எந்த அமைப்பு கொண்டாடுகிறது என எனக்கு தெரியாது. கோட்சேவுக்கு மரியாதை செலுத்துவது, கவுரவப்படுத்துவதை நான் எதிர்க்கிறேன். கோட்சே ஒரு கொலையாளி என்று கூறியிருந்தார்.
இதற்கு இந்து மகாசபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்துக்கு இந்து மகா சபையின் தேசிய துணைத் தலைவர் அசோக் சர்மா அளித்துள்ள பதில்:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நாட்டை மட்டுமல்ல இந்துக்களையும் காட்டிக் கொடுத்த துரோகிகள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தாய் அமைப்பே இந்து மகாசபை என்பதை சிலராவது அறிந்திருப்பார்கள்.
ஆனால் 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், இந்து மகாசபையுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டனர். அவர்கள் நேருவுடன் கை கோர்த்துக் கொண்டு காந்தி கொலை விவகாரத்தில் இருந்து விலகி நின்றனர். காந்தி கொலை சம்பவத்தின் போது இந்து மகாசபையினர் சித்ரவதைகளுக்கு ஆளானார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் இந்து மகாசபையை விட்டு ஓடிய துரோகிகள்.
இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பாரதிய ஜனதாவை முன்வைத்து ஆட்சி அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. இந்துக்களின் கவுரவத்தைக் காப்பாற்ற எந்த ஒரு நடவடிக்கையையும் அது மேற்கொள்ளவில்லை.
எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட அதன் கிளை அமைப்புகள் எதனுடனும் தொடர்பு இல்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உண்மை முகத்தை, இந்துக்களின் உணர்ச்சிகளை எப்படியெல்லாம் தூண்டிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது என்பதை அம்பலப்படுத்துகிற காலம் வெகுதொலைவில் இல்லை.
ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் பா.ஜ.க.வும் வாக்குகளை அறுவடைய செய்ய மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்கின்றன. இந்து மகாசபை தொடக்கத்தில் முன்வைத்த அத்தனை பிரச்சனைகளையும் தன்னுடையதாக காட்டிக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ்.
1949ஆம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி பாபர் மசூதியில் ராமர் சிலையை வைத்தது இந்து மகாசபைதான். போலீசார் அறிக்கையிலும் கூட இந்து மகாசபையே அந்த சிலையை வைத்ததாக பதிவு இருக்கிறது. இந்த ஜனசங்கமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் பாரதிய ஜனதாவும் அப்போது எங்கே இருந்தன?
இவ்வாறு அசோக் சர்மா கூறியுள்ளார்.