கிறிஸ்தவ மதமாற்றத்தை எதிர்த்து உ.பி.யில் கை கோர்த்த இந்து-இஸ்லாம் அமைப்புகள்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் சுகமளிக்கும் ஜெபக் கூட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு இந்து மற்றும் இஸ்லாம் அமைப்புகள் கோரிக்கைவிடுத்துள்ளன. கிறிஸ்தவ மதமாற்றங்களை தடுக்க தவறி வருவதாக அகிலேஷ் யாதவ் அரசுக்கு யாதவ அமைப்புகளும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
ஆக்ராவில் இஸ்லாமிய குடும்பங்களை இந்து மதத்திற்கு மாற்றியதாக இந்து அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யும் சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றன இந்து அமைப்புகள்.
சுகமளிக்கும் ஜெபக்கூட்டங்கள்
'சான்காய் சபா' என்று இந்தியில் அழைக்கப்படும் சுகமளிக்கும் ஜெபக்கூட்டங்களை கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தி, அதன் மூலம் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றிவருவதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. இதைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில், நேற்று, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
ஆளும் கட்சி ஆதரவு
விஹெச்பி தலைவர் பிரிஜேஷ் குப்தா கூறுகையில், "லோக்கல் சமாஜ்வாதி அரசியல்வாதிகள் ஆதரவால் மதமாற்றம் நடந்து வருகிறது. மதாதீன் வர்மா என்பவர் மதமாற்றத்தில் ஈடுபட்டுவருகிறார். போலீசார் அவரது வீட்டுக்கு சென்றபோது பக்கத்து ஊர் ஆட்களையும் கூட்டி வந்து பைபிள் வாசிக்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் போலீசாரால் மதவாதியை கைது செய்ய முடியாமல் போனதற்கு அரசியல்வாதிகளின் செல்வாக்குதான் காரணம். ஒரு கிராமத்தை மதம்மாற்றினால், அப்படியே அடுத்தடுத்த கிராமங்களுக்கும் அதை விஸ்தரிப்பு செய்வது கிறிஸ்தவர்கள் வாடிக்கையாகிவிட்டது" என்றார்.
பகுஜன் சமாஜ் கண்டனம்
அதே நேரம் மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ நீரஜ் மவுரியா, மதமாற்றங்களை கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், "கிறிஸ்தவ மிஷினரிகள், ஏழை மக்களை குறிவைத்தே மதமாற்றத்தை நடத்தி வருகின்றன. ஏழை மக்கள் பல்வேறு வகைகளில் ஏமாற்றப்படுகிறார்கள். மதமாற்றத்திற்கு உள்ளான, குலாரியா என்ற கிராமத்திற்கு நான் சென்றேன். அங்குள்ள மக்கள் நான் என்ன சொல்கிறேன் என்று காது கொடுத்து கேட்க கூட முடியாத நிலையில்தான் உள்ளனர். அந்த ஊரில் சர்ச் கட்டப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்" என்றார்.
முலாயமுக்கு எதிராக திரும்பிய யாதவர்கள்
இதனிடையே, அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி கட்சி நடைபெறும் உத்தரபிரதேசத்தில், முதல்வர் சார்ந்த யாதவர் அமைப்புகளே அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. யாதவர் குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு செல்வதை யாதவர் அமைப்புகள் விரும்பவில்லை. இந்துக்கள், தாய்மதம் திருப்பும் நடவடிக்கைகளை எடுக்க கூடாது என்று டெல்லியில் தர்ணா உட்கார்ந்தவர் சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ். இப்போது, அவரது வாக்கு வங்கியான யாதவர் அமைப்புகளே முலாயமுக்கு எதிராக திரும்பியுள்ளன.
மிஷினரிகள் வசதி செய்துள்ளன
கிருஷ்ணயாதவ் என்ற மதம்மாறிய கிறிஸ்தவர், நிருபர்களிடம் கூறுகையில் "எங்கள் அரசும், சமுதாயமும் செய்து கொடுக்காத வசதிகளை மிஷினரிகள் செய்து கொடுத்துள்ளன. எனவே வசதி வாய்ப்புக்காக மதம்மாறியுள்ளேன். இதில் என்ன தவறு உள்ளது" என்று கூறினார். மற்றொரு பெண் கூறுகையில், ஜெபக்கூட்டத்தில் சென்றதால் எனக்கு ஒரு நோய் குணமானது. எனவே மதம்மாறிவிட்டேன் என்று கூறினார்.
கைகோர்த்த இந்து-முஸ்லிம்கள்
ஆனால் சுகமளிக்கும் ஜெபக்கூட்டம் என்பது ஏமாற்றுவேலை என்று குற்றம்சாட்டும் இந்து அமைப்புகள், அறியாமையிலும், மருத்துவம் குறித்த தெளிவு இல்லாமலும் வாழும் மக்களை ஏமாற்றும் இக்கூட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று உ.பி அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளன.
இந்து அமைப்புகளுடன், முஸ்லிம் அமைப்புகளும் இந்த விஷயத்தில் கை கோர்த்துள்ளன. கிறிஸ்தவ மிஷினரிகள், முஸ்லிம்களையும் குறி வைப்பதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
முஸ்லிம்கள் குற்றச்சாட்டு
கிறிஸ்தவ மதமாற்றத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர் முஸ்லிம் அமைப்பினர். "ஏழை, எளிய முஸ்லிம்களிடம் தொடர்பு வைக்கும் கிறிஸ்தவ குழுக்கள், அவர்களை மதம்மாற்ற தொடங்கியுள்ளனர். மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை" என்கிறார் மவுலானா ரஷித்.