'உலக பாதுகாவலர்' டொனால்ட் ட்ரம்ப் பிறந்த நாளை டெல்லியில் கேக் வெட்டி கொண்டாடிய இந்து சேனா
டெல்லி: அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுபவர் டொனால்டு டிரம்ப். இவரது பிறந்த 69வது பிறந்த நாளை இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் இந்து சேனா அமைப்பினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் எழுதி வைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. கேக் வெட்டி டிரம்பின் புகைப்படத்திற்கு சில தொண்டர்கள் கேக் ஊட்டினர்.
இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா கூறுகையில், உலகை காக்க வந்த காவலராக ட்ரம்பை பார்க்கிறோம். பாஜக, இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து எவ்வளவோ பேசியது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும், மதசார்பின்மைவாதிகளாக மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில், தீவிரவாதத்தை அழிக்க வல்ல ஒரே நபர் டொனால்ட் ட்ரம்ப் என்பதால் அவரை ஹீரோவாக மதிக்கிறோம்.
விரைவிலேயே டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக ட்ரம்ப்புக்கு எங்களை ஆதரவை காட்ட பேரணி நடத்த உள்ளோம். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளேயும் பேரணி நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டொனால்ட் ட்ரம்ப் வெற்றிக்காக இந்து சேனா ஏற்கனவே யாகம் வளர்ந்து பிரார்த்தனை செய்திருந்தது நினைவிருக்கலாம். இதனிடையே இந்து சேனாவின் செயல்பாட்டுக்கு இந்துத்துவ ஆதரவாளர்கள் மத்தியிலேயே அதிருப்தி ஏற்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் எதிரொலித்தது.
கேக் கட் செய்வது என்பதே இந்து பாரம்பரியம் கிடையாது என்றும், ட்ரம்ப் இந்தியா பற்றி தப்பாக பேசியவர் என்பதால் அவரை புகழக்கூடாது என்பதும் அவர்கள் வாதமாக உள்ளது.