புகழ்பெற்ற விட்டல் ருக்மணி கோயிலில் பெண்கள், அனைத்து சாதியினர் அர்ச்சகராகின்றனர்!
பந்தர்பூர்: புகழ்பெற்ற மகாராஷ்டிரா விட்டல் ருக்மணி கோயிலில் பெண்கள் மற்றும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மஹராஷ்டிர மாநிலத்தில் பந்தர்பூரில் உள்ளது சுமார் 900 ஆண்டுகள் பழமையான விட்டல் ருக்மணி ஆலயம். இந்தக் கோயிலில் பல நூற்றாண்டுகளாக படுவே மற்றும் உத்பாத் ஆகிய இரண்டு பிராமண சமூகங்களைச் சேர்ந்தவர்களே பூஜைகளையும் சடங்குகளையும் செய்து வந்தனர்.
இந்த சமூகங்கள் வசம் இருந்துவந்த ஆதிக்கத்தை எதிர்த்து கோயிலின் அறக்கட்டளை மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கோயிலின் வருமானம் மற்றும் பூஜைகள் தொடர்பில் இந்த இரண்டு சமூகங்களும் தமது பரம்பரை உரிமைகளை இனிமேல் கோர முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத் தீர்ப்பை எதிர்த்து படுவே மற்றும் உத்பாத் என்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். உச்ச நீதிமன்றமும் கோவிலின் வருவாய் மற்றும் சடங்குகளில் இந்த சமூகங்களுக்கு உள்ள பரம்பரை உரிமைகளை நிராகரித்து தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து அர்ச்சகர் பணியிடங்களுக்கு பெண்கள் மற்றும் அனைத்து சாதியினரும் விண்ணப்பம் செய்யலாம் என்று விட்டல் ருக்மணி கோயில் நிர்வாகம் விளம்பரம் செய்துள்ளது. கோயிலின் பாரம்பரிய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் தெரிந்த பிரமணர் அல்லாத ஹிந்துக்களும் பெண்களும் அர்ச்சகர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று காலியாக உள்ள 8 அர்ச்சகர்கள் பணிக்கான விளம்பரம் கடந்த வாரம் வெளியானது.
இது குறித்து கருத்து தெரிவித்த விட்டல் ருக்மணி கோயில் அறக்கட்டளையின் தலைவர் அண்ணா டாங்கே, இந்தியாவில் பாரம்பரியமான, ஆகம விதிமுறைப்படியான கோவில்களில் பூஜைகள் உள்ளிட்ட அனைத்து மதச் சடங்குகளும் பிராமணர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் நூற்றாண்டு கால வழக்கத்தை மாற்றும் முதல் முயற்சி இது என்றார்.