பீகாரில் கலவரத்தின்போது 10 முஸ்லீம்களின் உயிரை காத்த இந்து பெண்
பாட்னா: பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் அண்மையில் கலவரம் வெடித்து 5 பேர் கொல்லப்பட்டபோது ஒரு இந்து பெண் 10 முஸ்லீம்களை காப்பாற்றியுள்ளார்.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்த 20 வயது இந்து வாலிபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லீம் பெண்ணை காதலித்ததால் அவர் கடத்தி, கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் அசிஸ்புர் பஹில்வாரா கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த காலமான ஜக்லால் சாஹ்னியின் மனைவியான ஷைல் தேவி தனது வீட்டுக்குள் 10 முஸ்லீம்களை மறைத்து வைத்துக் கொண்டார். அந்த கும்பல் வந்தபோது தனது வீட்டில் யாரும் இல்லை என்று தெரிவித்ததுடன் அவர்களை வீட்டுக்குள் சென்று தேட அனுமதி மறுத்து வாசலில் நின்று கொண்டார். இதையடுத்து அந்த கும்பல் திரும்பிச் சென்றது.
ஷைலால் காப்பாற்றப்பட்ட 10 பேரில் ஒருவரான ஆஷ் முகமது என்ற முதியவர் கூறுகையில்,
ஷைல் எங்களை காப்பாற்ற ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்ட தேவதை. அவர் மட்டும் எங்களுக்கு அடைக்களம் அளிக்காவிட்டால் அந்த கும்பல் எங்களை கொலை செய்திருக்கும் என்றார்.
பிற மதத்தவருக்கு உதவி செய்வதற்கு பெயர் போனவர் ஷைல் என்று கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை ஆசிஸ்புர் வந்த பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சி ஷைலை சந்தித்து அவரின் வீரச் செயலை பாராட்டி அவருக்கு ரூ.51 ஆயிரம் ரொக்கப் பரிசு அளித்தார். மேலும் ஷைலை ராணி லட்சுமி பாயுடன் ஒப்பிட்டு பேசினார்.
கலவரம் தொடர்பாக போலீசார் 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு முதல்வர் மாஞ்சி உத்தரவிட்டுள்ளார்.