இந்து பெண்கள் தலா 10 குழந்தைகள் பெத்துக்கனுமாம்.. சொல்வது உத்தர்காண்ட் சங்கராச்சாரியார்
அலகாபாத்: இந்து பெண்கள் அனைவரும் தலா 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தர்காண்ட் சங்கராச்சாரியார் ஸ்ரீ வாசுதேவானந்த் சரஸ்வதி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இந்து பெண்கள் ஒவ்வொருவரும் தலா 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சாக்ஷி மகராஜ் கூறி சர்ச்சை புயலைக் கிளப்பினார். அவரைத் தொடர்ந்து விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சாத்வி ப்ராச்சியும் இதேபோன்ற கருத்தை வெளிப்படுத்த பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில் உத்தர்காண்ட் மாநிலம் பத்ரிகா ஆசிரமத்தின் சங்கராச்சாரியாரான ஸ்ரீ வாசுதேவானந்த் சரஸ்வதி, இந்து பெண்கள் தலா 10 குழந்தைகள் பெற வேண்டும் என்று தெரி வித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீவாசுதேவானந்த் சரஸ்வதி. இந்துக்கள் ஒற்றுமையால் தற்போது நரேந்திர மோடி பிரதமர் ஆகி உள்ளார். இந்த நிலை தொடர வேண்டும். இந்துக்கள் 4 குழந்தை பெற்றுகொள்ள வேண்டும் என்பது தவறு.
எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தயாராக குறைந்தது 10 குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என நான் நினைக்கிகிறேன். கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு சென்றவர்கள் அனைவரும் இந்துக்கள் தான். இங்கிருந்து தான் அவர்கள் மதங்கள் மாறினார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது தாய் மதத்துக்கு திரும்ப வேண்டும். அவர்கள் மதம் மாறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கையோ, தடை செய்வதோ கூடாது என்று கூறியுள்ளார்.