வளர்ச்சி ரதத்தின் இரண்டு சக்கரங்கள் போன்றவர்கள் இந்துக்களும், முஸ்லீம்களும்...: மோடி
அகமதாபாத்: இந்துக்களும் முஸ்லீம்களும் நாட்டின் வளர்ச்சி ரதத்தின் இரண்டு சக்கரங்கள் போன்றவர்கள், எனவே, ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.
குஜராத் தலைநகரான அகமதாபாத்தில் முஸ்லீம்களின் மூன்று நாள் வணிக நிகழ்ச்சி ஒன்று தொடங்கியுள்ளது. இதில் நாட்டில் உள்ள 80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும், இந்நிகழ்ச்சியில் துபாயில் இருந்தும் 10 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றது.
இந்த வர்த்தக கண்காட்சியை குஜராத் முதல்வரும், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து விழாவில் அவர் கூறியதாவது:-
இந்துக்களும் முஸ்லீம்களும் வளர்ச்சியின் இரண்டு சக்கரங்கள் போன்றவர்கள்.நாட்டில் நிலையான வளர்ச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவசியம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு எல்லோருடைய பங்களிப்பும் அவசியம்.வளர்ச்சியை வேகமாக கொண்டுவரவேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டில் 24 மணி நேர மின்சார வினியோகம் அவசியம்.கடந்த 20 ஆம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் வளர்ச்சியை காணமூடிகிறது.சிறிய விஷயங்களில் ஏற்படும் மாற்றம் பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
முஸ்லீம்கள் பெரிய தொழில்களை கொண்டுள்ளனர். அவர்கள் மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வந்துள்ளனர்.முஸ்லீம் இளைஞர்களும் பெண்களும் மிகப்பெரும் திறமையை கொண்டுள்ளனர்.ஆனால் அவர்களுக்கு பொருத்தமான தளம் வேண்டும்.வேலையை தேடுவதற்கு பதிலாக பிறருக்கு வேலை வாய்ப்பை வழங்க கூடிய நிலைக்கு வர வேண்டும்' என இவ்வாறு அவர் பேசினார்.
இந்த தொழில் கண்காட்சிக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை புரிவார்கள் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.