கான்பூரில் வெறியாட்டம்- ஜெய் ஶ்ரீராம் முழக்கம் சொல்லாத முஸ்லிம் சிறுவன் மீது கொடூர தாக்குதல்!
கான்பூர்: இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்தியபடி ஜெய் ஶ்ரீராம் முழக்கத்தை சொல்ல மறுத்த 16 வயது முஸ்லிம் சிறுவன் மிக கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் கான்பூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய் ஶ்ரீராம் முழக்கமானது வட இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு ஆயுதமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஜார்க்கண்ட்டில் இந்த முழக்கத்தை சொல்ல மறுத்த முஸ்லிம் இளைஞர் விடிய விடிய தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இம்முழக்கத்தை சொல்ல மறுத்த இஸ்லாமியர்கள் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. தற்போது உத்தரப்பிரதேசத்தின் 16 வயது முஸ்லிம் சிறுவன் மீது இக்கும்பல் பாய்ந்துள்ளது.
கான்பூர் அருகே கித்வாய் நகரைச் சேர்ந்த முகமது தாஜ் என்ற சிறுவன், வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் முகமது தாஜை வழிமறித்துள்ளது.
வருமானத்தை எதிர்பார்க்கும் தங்கதமிழ்ச் செல்வன் தன்மானத்தை பற்றி பேசக் கூடாது.. தமிழிசை நறுக்
முதலில் தலையில் குல்லா அணியக் கூடாது என அக்கும்பல் சிறுவனிடம் தகராறு செய்தது. அதன் பின்னர் ஜெய் ஶ்ரீராம் என முழக்கமிட வலியுறுத்தியது. இதற்கு முகமது தாஜ் மறுத்திருக்கிறார்.
உடனே வெறிகொண்ட அக்கும்பல், முகமது தாஜை கொடூரமாக உதைத்து தாக்கியது. இதனால் நிலைகுலைந்த முகமது தாஜ் உதவிகேட்டு அலறி இருக்கிறார்.
அங்கே இருந்த கடைக்காரர்கள் அக் கும்பலிடம் இருந்து முகமது தாஜை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.