மகாபாரதம் பட டைட்டிலை மாத்துங்க... மோகன்லாலை மிரட்டும் சசிகலா
நடிகர் மோகன்லால் நடிக்கும் மகாபாரதம் படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கேரள இந்து அமைப்பின் தலைவர் சசிகலா கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லால் நடிக்கும் மகாபாரதம் படத்தை அதே பெயரில் திரையிட விட மாட்டோம் என்று கேரள இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் கே.பி சசிகலா அறிவித்துள்ளார்.
மலையாளத்தில் மூத்த எழுத்தாளரான எம்.டி.வாசுதேவநாயர் எழுதிய இரண்டாம் ஊழம் என்ற நாவலை மையப்படுத்தி உருவாக உள்ள மகாபாரதக் கதையை ரூ.1000 கோடி செலவில் பி.ஆர்.ஷெட்டி என்பவர் படமாக தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு மகாபாரதா-ரெண்டாம் ஊழம் என்று பெயர் வைத்துள்ளதாகவும், படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ள இப்படத்தில், மகாபாரத் கதையில் வரும் பீமன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் நாகர்ஜுனாவும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நேரடியதக வெளியாக உள்ளது. 2018ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. 2020ஆம் ஆண்டு இது ரிலீஸ் ஆக உள்ளது.
ஹாலிவுட் சினிமாக்களுக்கு இணையாக தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த சினிமாவின் பெயரை மாற்றாவிட்டால் திரையிட விடமாட்டோம் என்று கேரள இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் சசிகலா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.டி. வாசுதேவன்நாயர் எழுதிய இரண்டாம் ஊழம் என்ற நாவலை தழுவி சினிமா தயாரித்தால் அதற்கு இரண்டாம் ஊழம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மகாபாரதம் என்று பெயர் வைக்க கூடாது.
மகாபாரதம் என்ற பெயரில் சினிமா எடுத்தால் வேதவியாசரின் காவியத்தை மையமாக கொண்டு தயாரிக்க வேண்டும். அதை மீறி வந்தால் திரையரங்குகளில் திரையிட விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.