அஸ்ஸாமில் அட்டூழியம்... ஜெய் ஶ்ரீராம் கோஷம் போட கட்டாயப்படுத்தி முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்
பர்பேடா: அஸ்ஸாமில் இந்துத்துவா கும்பல் ஒன்று முஸ்லிம்களை ஜெய் ஶ்ரீராம் கோஷம் போட்டாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தான் மர்தாபாத் எனவும் கோஷங்களை எழுப்ப வேண்டும் என தாக்கி சித்ரவதை செய்துள்ளது அக்கும்பல்.
இந்துத்துவாதிகளுக்கு ஜெய் ஶ்ரீராம் கோஷம் இப்போது ஆயுதமாகிவிட்டது. தங்களை எதிர்ப்பவர்களை நோக்கி ஜெய் ஶ்ரீராம் என முழக்கம் எழுப்பி கோபங்களை தூண்டிவிட்டு குளிர்காய்வது இந்துத்துவா அமைப்புகளின் வாடிக்கையாகிவிட்டது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி செல்லும் இடங்களில் எல்லாம் இந்த முழக்கங்கள் வேண்டும் என்றே அவரை சீண்டுவதற்காகவே எழுப்பப்படுகின்றன. லோக்சபாவில் தமிழ் வாழ்க- பெரியார் வாழ்க என தமிழக எம்பிக்கள் முழங்கினாலும் ஜெய் ஶ்ரீராம் என பதில் முழக்கம் எழுப்புகின்றனர் பாஜகவினர்.
இதனால் ஜெய் ஶ்ரீராம் முழக்கத்தை முஸ்லிம்கள் கட்டாயம் எழுப்ப வேண்டும் எனக் கூறி பல இடங்களில் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது அஸ்ஸாமில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது/
அஸ்ஸாமின் பர்பேடா பகுதியில் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்த முஸ்லிம்களை இந்துத்துவா கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. அவர்களைத் தாக்கி வீடியோக்கள் எடுத்ததுடன் ஜெய்ஶ்ரீராம் என கோஷம் போட சொல்லியிருக்கிறார்கள்.
அத்துடன் பாரத் மாதா கீ ஜே, பாகிஸ்தான் மர்தாபாத் ஆகிய முழக்கங்களையும் எழுப்ப வேண்டும் என கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் சிறுபான்மையினரை அச்சம் கொள்ள வைக்கும் முழக்கமாக ஜெய் ஶ்ரீராம் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது.