காதலர் தினத்துக்கு எதிர்ப்பு - இந்துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் வெறியாட்டம்!
காதலர் தினத்துக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் பல இடங்களில் வன்முறைகளை நிகழ்த்தியுள்ளன.
Recommended Video
டெல்லி: காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் வெறியாட்டம் போட்டுள்ளனர். அகமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் காதலர்களை அடித்து விரட்டியும் கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சித்தும் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.
காதலர் தினம் மேற்கத்திய கலாசாரம்; அதை கொண்டாடக் கூடாது என்பது பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளின் கருத்து. காதலர் தினம் வந்துவிட்டாலே அதுவரை இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் இந்துத்துவா அமைப்புகள் வீதிகளுக்கு வந்துவிடுகின்றன.
பல மாநிலங்களில் போராட்டம்
தமிழகத்தில் சக்தி சேனா என பெயரே கேள்விப்படாத அமைப்பு கோவையில் காதலர்களை குறி வைத்து தாக்கி மீடியா வெளிச்சத்தை வாங்கிக் கொண்டது. ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில் பஜ்ரங் தள் அமைப்பினர் காதலர்களை தேடித் தேடி தாக்கினர்.
ஒடிஷாவில் கலிங்க சேனா
ஷாப்பிங் மால்கள், பூங்காக்களில் காதலர் தின எதிர்ப்பு என்ற பெயரில் இந்துத்துவா அமைப்புகள் அத்துமீறல் அட்டகாசத்தை அரங்கேற்றினர். ஒடிஷாவில் கலிங்க சேனா அமைப்பு இதேபோல் வன்முறையில் இறங்கியது.
சபர்மதி நதி கரையில் தாக்குதல்
அகமதாபாத்தில் சபர்மதி நதிக்கரையில் காதலர்களை தடி கொண்டு இந்துத்துவா அமைப்பினர் தாக்கி விரட்டியடித்தனர். ஹைதராபாத்தில் காதலர் தினத்தை தடை செய்ய வலியுறுத்தி பஜ்ரங் தளத்தினர் போராட்டங்களை நடத்தினர்.
நாக்பூரில் போராட்டம்
லக்னோவில் காதலர் தின அசம்பாவிதங்களை தடுக்க லக்னோ பல்கலைக் கழகத்துக்கு இன்று விடுமுறைவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் பஜ்ரங் தளத்தினர் காதலர் தினத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.