ரூபாய் நோட்டு ஒழிப்பு.. மத்திய அரசின் முடிவு துணிச்சலானது - அன்னா ஹசாரே பாராட்டு!!
ரூ 500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு அன்னா ஹசாரே பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெல்லி: கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை துணிச்சலானது என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு சமூக ஆர்வரலர் அன்னா ஹசாரே பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசின் நடவடிக்கை மூலம் நாட்டில் கருப்பு பணத்தை ஒழிப்பதுடன் கள்ள நோட்டுகள் புழக்கத்தையும் ஒழிக்க ஏதுவாக இருக்கும்.
மத்திய அரசின் இந்த முடிவு துணிச்சலானது. மத்தியில் அமைந்த முந்தைய அரசுகள் செய்யாத ஒன்றை துணிச்சலுடன் செய்திருப்பது பாராட்டுக்குரியது. ரூ 500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு "ஒரு புரட்சி" தான் எனவும் அவர் கூறினார். இதன் மூலம் ஜனநாயகத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்.
அதே வேளையில் தேர்தல் சமயத்தில் கருப்புப் பணம் புழக்கத்தில் விடப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தால் தேர்தல் நடைமுறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் வரும். மேலும் அவர் கூறுகையில் அதேபோல மக்கள் பணப்பிரச்சனைகளில் திண்டாடி வருவதை போர்க்கால அடிப்படையில் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அரசியல் கட்சிகள் ரசீது இல்லாமல் வாங்கும் நன்கொடைகளுக்கு கணக்கு காண்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.