சல்மான் கானுக்கு 1 மணிக்கு சிறை… 5 மணிக்கு ஜாமீன்: பாதிக்கப்பட்டவர்கள் குமுறல்
மும்பை: கார் மோதி ஒருவர் பலியான வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், சல்மான் கானுக்கு இரண்டு நாள் இடைக்கால் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று பிற்பகல் 1 மணிக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட சல்மான் கான், மாலையே தனது வீட்டுக்குத் திரும்பினார்.
கடந்த 2002, செப்டம்பர் 28ம் தேதியன்று அதிகாலையில், சல்மான் கான் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு தனது காரில் பாந்த்ராவில் உள்ள வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். நள்ளிரவு வரை நடந்த விருந்தில் கலந்து கொண்ட அவர், மது போதையில் கார் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
பாந்த்ரா பாலிஹில் ரோடு பகுதியில் சல்மான் கான் கார் வந்தபோது, சாலையோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது அவரது கார் ஏறியது. இதில் நூருல்லா மெஹபூப் ஷெரீப் என்பவர் பலியானார். காலீம் முகமது, முன்னா மலாய் கான், அப்துல்லா ரவுப் ஷேக், முஸ்லிம் ஷேக் ஆகிய 4 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் இந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட சல்மான் கானுக்கு அன்றைய தினமே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
13 ஆண்டுகால வழக்கு
கிட்டத்தட்ட 13 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி டி.டபிள்யூ. தேஷ்பாண்டே தீர்ப்பு வழங்கினார். சல்மான் கானை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.
செய்த குற்றம் என்ன?
‘‘கொலைக்கு நிகரான குற்றச்சாட்டு உட்பட சல்மான் கான் மீது இ.பி.கோ.304(ஏ)(தாறுமாறாக வாகனம் ஓட்டுதல்), 279(விதிகளை மீறி வாகனம் ஓட்டுதல்), 337(லேசான காயம் ஏற்படுத்துதல்), 338 (பலத்த காயம் ஏற்படுத்துதல்), 427 (அலட்சியம்) ஆகிய பிரிவுகளில் தொடரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் சல்மான் கான் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதும், அவர், 2004ம் ஆண்டில்தான் அவர் லைசென்ஸ் பெற்றதும் ஆர்.டி.ஓ. ஆவணங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது'' என்று நீதிபதி தேஷ்பாண்டே தனது தீர்ப்பில் கூறினார்.
மாலையில் ஜாமீன்
இதற்கிடையே, செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சல்மான் கான் தரப்பில் அவரது வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் ஷிவ்டே உடனடியாக மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து ஜாமீன் கோரினார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மும்பை உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு இரண்டு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. மேலும் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தண்டனையும் ஜாமீனும்
காலையில் வீட்டிலிருந்து செஷன்ஸ் நீதிமன்றத்துக்குச் சென்ற சல்மான் கானுக்கு நீதிபதி 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதியம் தீர்ப்பளித்தார். அதையடுத்து போலீஸ் வசம் சல்மான் கான் ஒப்படைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையில், சல்மான் சார்பில் உயர் நீதிமன்றத்தில், இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்டு 2 நாள் இடைக்கால ஜாமீன் அளித்தது உயர் நீதிமன்றம்.
வீடு திரும்பிய சல்மான்
இதனையடுத்து சுமார் 8 மணி நேரம் செசன்ஸ் நீதிமன்றத்தில் இருந்த சல்மான் கான், உயர்நீதிமன்றத்தில் இருந்து ஆவணங்கள் வந்த பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார். நேராக சல்மான் கான் தனது வீட்டிற்கு சென்றார். அவரது வீடு முன்பு ஏராளமான ரசிகர்கள் குழுமியிருந்தனர். அவர்கள் சல்மான் கானை சூழ்ந்து கொண்டனர். இதனையடுத்து அவர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
சிறை செல்லமாட்டார்
இதனிடையே, சல்மான் கான் வழக்கு தொடர்பான முழு தீர்ப்பு வரும் வரை, அவர் சிறை செல்ல மாட்டார் என்று சல்மான் கானின் வக்கீல் சால்வே கூறியுள்ளார்.
இழப்பீடு வேண்டும்
நடிகர் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை விதிப்பதால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று கார் விபத்தில் பலியான நூருல்லா மெஹ்பூப் ஷரீபின் மனைவி கூறியுள்ளார். "எங்களுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், நாளுக்கு நாள் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் அந்தப் பணம் எங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று கூற முடியாது. எனவே, என் மகனுக்கு ஒரு வேலை கிடைத்தால் போதுமானதாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
விரோதம் இல்லை
விபத்தில் தனது காலை இழந்த அப்துல்லா ரவுஃப் ஷேக், "நடிகர் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை விதிப்பதால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எங்களுக்குத் தேவை எல்லாம் இழப்பீடு மட்டுமே. இந்த 13 ஆண்டுகளில் என்னை யாரும் வந்து பார்த்ததில்லை. சிறு வேலைகள் செய்து என் குடும்பத்தை மிகவும் கஷ்டப்பட்டு காப்பாற்றி வருகிறேன். இருப்பினும், சல்மான் கான் மீது நான் எப்போதும் விரோதம் கொண்டதில்லை. இன்றளவும் அவரது படங்களைப் பார்த்து வருகிறேன்.
கால் கிடைக்குமா?
சல்மான் தண்டிக்கப்படுவதால் மட்டும் நான் இழந்த கால் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக எங்கள் வாழ்வாதாரத்துக்கு போதிய இழப்பீடு வழங்கினால் அதுவே போதுமானது" என்றார்.