கார் விபத்து வழக்கு தீர்ப்பு: நீதிமன்றத்தில் கதறி அழுத சல்மான்கான்
மும்பை: கார் விபத்து வழக்கில் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு நீதிமன்றத்திலேயே நடிகர் சல்மான் கான் கதறி அழுதார்.
2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் சென்ற கார் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இதில் நுருல்லா மெஹ்பூப் செரிஃப் என்பவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மான் கான், மருத்துவமனை பரிசோதனைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சுமார் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று மும்பை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நடிகர் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்த நீதிபதி மது அருந்திவிட்டு சல்மான் கான் காரை ஓட்டியதும், லைசென்ஸ் இல்லாமல் காரை ஓட்டியது உள்பட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆகியுள்ளதாக கூறினார்.
மரணம் விளைவிக்கும் வகையில் மது அருந்தியது தண்டனைக்குரிய குற்றம் என்றும் நீதிபதி கூறினார். தொடர்ந்து அவர் தண்டனை விவரம் பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து நீதிமன்றம் 45 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதி கேள்வி
தீர்ப்பை அறிவித்த நீதிபதி சல்மான்கானைப் பார்த்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று கேட்டார்.
சல்மான் மறுப்பு
தன்மீதான குற்றத்தை மறுத்த சல்மான்கான் காரை தான் ஓட்டவில்லை என்று கூறினார்.
கதறி அழுத சல்மான்
இந்த தீர்ப்பை கேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சல்மான் கான் கதறி அழுதார். பின்னர் விரக்தியடைந்த அவர் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டார். இதனையடுத்து சல்மான் கானை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
உடல்நிலை மோசம்
தீர்ப்பை கேட்ட உடன் சல்மான்கானின் தாயாரின் உடல்நிலை மோசமானது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சங்கீதா பிஜ்லானி விரைவு
தீர்ப்பினை கேட்ட நடிகை சங்கீதா பிஜ்லானி சல்மான்கான் வீட்டிற்கு விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.