நோயாளிகளுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவர்... உ.பி-யில் நடந்த விபரீதம்
உத்தரபிரதேசத்தில் ஒரே ஊசியை அனைத்து நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டதால் 21பேருக்கும் மேற்பட்டோர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
Recommended Video
உன்னோ: குறைந்த செலவு மருத்துவம் என்று நம்பி வந்த நோயாளிகளுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி அனைவருக்கும் எய்ட்ஸ் நோயை மருத்துவர் ஒருவர் பரப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உத்தரபிரதேசத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் குறித்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட மருத்துவக்குழுவினர் உன்னோ பகுதியில் அதிகமாக எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து நவீன கருவிகளுடன் அப்பகுதியில் முகாமிட்ட மருத்துவக்குழுவினர் அப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்டோர் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் 21பேருக்கு எய்டஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ந்துப்போன மருத்துவக்குழு, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அனைவரும் உடல்நலக்குறைவு காரணமாக சமீபகாலத்தில் ஒரே மருத்துவரிடம் ஊசிப் போட்டுக்கொண்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து ராஜேந்திர குமார் என்ற அந்த மருத்துவரிடம் சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில் அனைவருக்கும் ஒரே ஊசியை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த மருத்துவரை கைது செய்த போலீசார், அவரிடம் மேலும் எத்தனை பேருக்கு ஒரே ஊசியை அவர் பயன்படுத்தினார் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது
குறைந்த செலவில் மருத்துவம் என்று நம்பி வந்த ஏழை மக்கள் தற்போது உயிருக்கே ஆபத்தான நோயுடன் வாழ்க்கையை தொலைத்தபடி இடிந்துப்போயுள்ளனர். இவ்விவகாரத்தில் தற்போது தீவிரம் காட்டி வரும் சுகாதாரத்துறையினர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.