ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் பதற்றம் - அமர்நாத் யாத்திரை ரத்து
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆயுதமேந்திய தீவிரவாதிகளாக மாற்றிய ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதன் எதிரொலியாக அங்கு பதட்டம் நிலவுவதால் அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமர்நாத் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, யாத்திரை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி குழுக்களில் ஒன்றான ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் பர்கான் முசாபர் வானி. 22 வயதான இவர் காஷ்மீர் மாநிலத்தின் கமாண்டர் போல செயல்பட்டு வந்தான்.
சமீபத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு மிரட்டல் வீடியோவை வெளியிட்ட வானி, அதில் காஷ்மீரில் பண்டிட்டுக்களுக்கு என்று தனி குடியிருப்பு அமைக்கக்கூடாது. மீறி அமைத்தால் அந்த குடியிருப்புகளை அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார்.
அதோடு காஷ்மீரில் பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் கூறியிருந்த அந்த தீவிரவாதி, காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் அதிக அளவில் வந்து சேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
காஷ்மீரில் தொடர்ந்து அமைதியை சீர்குலைப்பதால் பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் அவனை தேடி வந்தனர். பர்ஹான் வானி பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அவன் சில தீவிரவாதிகளுடன் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நேற்று மாலை அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
தேடுதல் வேட்டை தீவிரமானபோது தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
நீண்ட நேரம் துப்பாக்கி நடந்த இந்த சண்டையில் இதில் தீவிரவாதி பர்கான் முசாபர் வானி உள்பட 3 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் தரப்பில் ஒருவர் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தீவிரவாதி வானியின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். 2010ம் ஆண்டு அவனும், அவனது சகோதரன் காலித்தும் வீட்டை விட்டு வெளியேறி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தனர்.
2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த துப்பாக்கி சண்டையில் காலித் கொல்லப்பட்டான். தற்போது பர்கானும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். தீவிரவாதி பர்கான் முசாபர் வானி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது, காஷ்மீர் போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
தீவிரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் பரவியதும் அனந்த்நாக் மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கடை அடைப்பு நடத்த பிரிவினைவாத தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அம்மாவட்டத்தில் பதட்டத்தை தணிக்க ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போலீஸ் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, யாத்திரை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமர்நாத் பனிலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.