காஷ்மீரில் கடும் துப்பாக்கிச்சூடு: ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரில் உள்ள சொபோர் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சொபோர் நகரில் இருக்கும் பாத் மொஹல்லா பகுதியில் ஒரு வீட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று காலை போலீசாரும், ராணுவத்தினரும் கூட்டாக சேர்ந்து அந்த வீட்டை சுற்றி வளைத்து தீவிரவாதியை சரணடையுமாறு கூறினர். ஆனால் தீவிரவாதியோ போலீசார் மற்றும் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். பதிலுக்கு அவர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி பலியானான். பலியான தீவிரவாதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த முகமது ஷபி ஷேக் (எ) ஷபி பீர் என்பது தெரிய வந்துள்ளது.