காஷ்மீரில் பயங்கரவாதி ரியாஸ் நய்கூவுடன் ஹிஸ்புல் முஜாஹிதீனுக்கு முடிவுரை எழுதிய பாதுகாப்பு படை!
புல்வாமா: ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி ரியாஸ் நய்கூவை பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வீழ்த்திய நிலையில் இனி அந்த இயக்கத்தை வழிநடத்த தளபதி யாரும் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர் தேசத்தின் பாதுகாப்புப் படையினர்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவம், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து இன்று பந்திபோரா, புல்வாமா பகுதிகளில் அதிரடி தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இத்தேடுதல் நடவடிக்கையின் போது அவந்திபோரா பகுதியில் ஷார்சாலி க்ரூ பகுதியில் பயங்கரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது.
பயங்கரவாதி நய்கூ
இந்த மோதலில் ரியாஸ் நய்கூ உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தளபதியாக இருந்தவர் ரியாஸ் நய்கூ. இவரது தலைக்குதான் பாதுகாப்புப் படையினர் ரூ. 12 லட்சம் சன்மானம் அறிவித்திருந்தனர்.
படையினருக்கு எதிரான தாக்குதல்கள்
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களில் மூளையாகச் செயல்பட்டவது ரியாஸ் நய்கூதான். கடந்த ஆண்டு மே மாதம் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்க தளபதி ஜாஹிர் மூசா கொல்லப்பட்ட பின்னர் நய்கூதான் இந்த இயக்கத்தை வழிநடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இளைஞர்களை மூளை சலவை செய்த நய்கூ
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட போது தேசத்துக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்ததும் நய்கூதானாம். சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை பயன்படுத்தி காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தவர் நய்கூ என்றும் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
நய்கூ அறிமுகம் செய்த ஸ்டைல்
பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்படும் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்துவதும் நய்கூ ஸ்டைல். தற்போது நய்கூ சுட்டு வீழ்த்தப்பட்டதால் இனி ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை வழிநடத்தும் தளபதிகள் இல்லை என்பது பாதுகாப்புப் படையினரின் பெருமிதம்.