ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் வன்முறை - 11 பேர் பலி; 200 பேர் காயம்
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நடந்த வன்முறை மோதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் பகுதியில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ஹிஜ்புல் முஜாஹிதீன் கமாண்டர் புர்ஹான் வானி உள்பட தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, அனந்த்நாக் மாவட்டம் உள்ளிட்ட ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. தொடர்ந்து, பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததால், அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, செல்போன் இணைய சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அமர்நாத் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, யாத்திரை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் வாசிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு படையினருக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் உட்பட 200 பேர் காயமடைந்தனர்.