ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் அப்துல் புர்ஹன் வானி உள்பட தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீர் அனந்தநாக் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது பாதுகாப்பு படைவீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் அப்துல் புர்ஹன் வானி (21) உள்பட மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
அப்துல் புர்ஹன் வானி:
அப்துல் புர்ஹன் வானி 15 வயதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் சேர்ந்து பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்தார். இவர் அந்த அமைப்பின் கமாண்டராக இருந்து வந்தார். சமூக வலைதளங்கள் மூலமாக படித்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஹிஸ்புல் அமைப்பிற்கு ஆள்சேர்ந்தும் வந்தார்.
போலீசரால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள புர்ஹன் மீது நாசவேலையில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது.