தாவூத் கூட்டாளியை தப்ப வைத்தார் உள்துறை அமைச்சர் ஷிண்டே?
டெல்லி: பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான டெல்லி தொழிலதிபரிடம் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தடைவிதித்தார் என்று மத்திய உள்துறை முன்னாள் செயலர், ஆர்.கே.சிங் அதிரடி புகாரை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை பிடிக்க, அமெரிக்க உளவு அமைப்புடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இது குறித்து தொலைக்காட்சி ஒன்று பேட்டியளித்த முன்னாள் உள்துறை அமைச்சரும் பாஜகவில் இணைந்தவருமான ஆர்.கே.சிங் டெல்லி போலீஸ் வசம் சிக்கிய தாவூத் இப்ராகிம் கூட்டாளியை தப்ப வைத்ததே ஷிண்டே தான். கிரிக்கெட் பிக்சிங் புகாரில் சிக்கிய அந்த நபரிடம் விசாரணை நடத்த விடாமல் போலீசை தடுத்த ஷிண்டே, இப்போது தாவூத் இப்ராகிமை பிடிக்கப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.
ஆர்.கே.சிங்கின் இந்த அதிரடி குற்றச்சாட்டை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. பாரதிய ஜனதா பக்கம் தாவிவிட்ட ஆர்.கே.சிங் பேச்சை பொருட்டாக மதிக்க தேவையில்லை என்றார்.
ஆனால் பாரதிய ஜனதாவோ உள்துறை அமைச்சர் ஷிண்டேவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.