நான் ஒரு விவசாயி: வேட்புமனுவில் தெரிவித்துள்ள சுஷில் குமார் ஷிண்டே
மும்பை: மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே வேட்புமனுவில் தான் ஒரு விவசாயி என்று தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து விவரங்களை தெரிவித்தார்.
அவரிடம் ரூ.6.18 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், அவரது மனைவிக்கு ரூ.2.4 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகளும் அடக்கம். ஷிண்டேவிடம் ரூ. 5.72 லட்சம் மதிப்புள்ள 2011ம் ஆண்டு மாடல் டிராக்டரும், ரூ.4.7 லட்சம் மதிப்புள்ள ஜெனரேட்டரும், இந்த ஆண்டு வாங்கிய ரூ.10 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா பார்ச்சூனரும், அவரது மனைவியிடம் ரூ.7.3 லட்சம் மதிப்புள்ள டெம்போவும் உள்ளது.
ஷிண்டேவிடம் விவசாய நிலம், பண்ணை வீடுகள், பிளாட்டுகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவையும் உள்ளன. அவர் சுயமாக தனது பெயரில் ரூ.5.8 கோடி சொத்தும், தனது மனைவியின் பெயரில் ரூ.9.08 கோடி சொத்தும் வாங்கியுள்ளார். மேலும் அவருக்கு ரூ.1.5 லட்சம் லோன் உள்ளதாம்.
இதில் விந்தை என்னவென்றால் மத்திய அமைச்சராக இருக்கும் அவர் தனது தொழில் விவசாயம் மற்றும் சமூக சேவை என்று தெரிவித்துள்ளார். தான் அதிகபட்சமாக வாங்கிய பட்டம் எல்.எல்.பி. என்று தெரிவித்துள்ளார்.