ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவு.. அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு
எல்லையில் வீரர்களுக்கு போதிய அளவு உணவு வழங்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லி: ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பி.எஸ்.எஃப். எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தேஜ் பதூர் யாதவ் என்ற வீரர் தனது மொபைல் போன் மூலம் தான் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் 11 மணி நேரத்திற்கும் மேலாக கடுங்குளிரில் காவல் காக்கும் தங்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என புகார் தெரிவித்துள்ளார். தங்களுக்கு வழங்கப்படும் உணவில் ஊழல் நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த வீடியோ நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுகுறித்து விசாரிக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். நாளைக்குள் அறிக்கை அளிக்க எல்லை பாதுகாப்பு படைக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.