தென் மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள்... உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
டெல்லி: தென்மாநிலங்களில் மட்டும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 150 பேர் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதனையடுத்து அவர்கள் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் நடத்த இருப்பதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்ததையடுத்து, இந்தியாவில் அதன் ஆதரவாளர்களை கண்டறிந்து அவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய உளவுத்துறை மேற்கொண்ட ரகசிய ஆய்வில் ஐ.எஸ் இயக்கத்திற்கு தென்னிந்தியாவில் அதிக அளவில் ஆதரவாளர்கள் இருப்பதாகவும், குறிப்பாக தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவன் பலரையும் தீவிரவாதிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில் மட்டும் 150 ஐ.எஸ் ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உளவுத்துறை அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் பட்டதாரிகள் ஆவர்.
மாநில அரசுகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாவிட்டால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.