ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரிக்குமா?- உள்துறை அமைச்சகம் பரிந்துரையால் பரபரப்பு
ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவின் கோரிக்கையின் பேரில், ஜெயலலிதாவின் மரணம் பற்றி சிபிஐ விசாரிக்கும்படி உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி: தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் கடந்த டிசம்பர் 5ம் தேதியன்று இதயமுடக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை.
கடந்த 75 நாட்களுக்கும் மேலாக, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஜெயலலிதா திடீரென உயிரிழந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, பலரும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
ஜெயலலிதா சிகிச்சை
ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த போது அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை,தமிழக ஆளுநர்,ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள் என ஏராளமானோர் மருத்துவர்களிடம் மட்டுமே விசாரித்து திரும்பினர்.
தொண்டர்கள் அதிர்ச்சி
ஜெயலலிதா நன்கு குணமாகி வந்தார் என்று கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஆனால் அமைச்சர்களோ, அதிமுக நிர்வாகிகளோ கலங்காமல் தங்களின் பணிகளை செய்து வருகின்றனர்.
சசிகலா புஷ்பா
இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி சசிகலா புஷ்பா எம்.பி. மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த புகார் மனுவை கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சசிகலா புஷ்பா அளித்தார்.
உள்துறை அமைச்சகம் பரிந்துரை
இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் புகார் கடிதத்தை சி.பி.ஐக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. மேலும் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் சி.பி.ஐக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் பற்றி சிபிஐ விசாரிக்குமா?