வங்கதேசத்தவருக்கு பன்முக விசா.. வெளியுறவு அமைச்சக பரிந்துரையை நிராகரித்தது உள்துறை!!
டெல்லி: வங்கதேச நாட்டவர் இந்தியாவில் நுழையும் போதே பன்முக விசா வழங்குவது தொடர்பான வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பரிந்துரையை உள்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறுவோரைக் கண்டுபிடித்து வெளியேற்றுவோம் என்று பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்தது.
அதன்படி அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி.க்களும் சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தவரை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தமது முதல் வெளிநாட்டு பயணமாக நாளை மறுநாள் வங்கதேசம் செல்ல இருக்கிறார்.
இந்த பயணத்தை ஒட்டி வெளியுறவுத் துறை அமைச்சகம் சில ஏற்பாடுகளை செய்திருந்தது. அதாவது வங்கதேசத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் விசா இல்லாமல் இந்தியா வர அனுமதிப்பது, ஒரே விசாவில் பன்முக நுழைவு, டாக்காவில் இருந்து மேகலாயாவின் ஷில்லாங் வழியாக அஸ்ஸாமுக்கு பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பல திட்டங்களை தயாரித்தது. பின்னர் இது அஸ்ஸாம் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அம்மாநில அரசும் தமது கருத்துகளை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்த பரிந்துரைகள் உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் பன்முக விசா உள்ளிட்ட சில பரிந்துரைகளை உள்துறை அமைச்சகம் நிராகரித்திருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.