நாடு முழுவதும் என்ஆர்சி கொண்டுவரப்படுமா.. நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் விளக்கம்
Recommended Video
டெல்லி: நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு, அப்படியாக எந்த ஒரு திட்டமும் அரசுக்கு இதுவரை இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடைபெறுவது வழக்கம். கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது.
இப்போது மீண்டும் 2020ம் ஆண்டான இந்த ஆண்டில் நடைபெற உள்ளது. ஆனால் கடந்தமுறை மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எந்த பிரச்சனையும் எழாத நிலையில் இந்த முறை தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட உள்ளதாக கூறி அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
அடடே.. சுட்டு கொல்லுங்கள் என்று சொன்ன அனுராக் தாக்கூரா இது.. இப்போ எப்படி பேசுகிறார் பாருங்களேன்
19லட்சம் பேர்
ஏனெனில் அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் கொண்டுவரப்பட்டு அதில் இறுதியாக வெளியிடப்பட்ட பட்டியலின்படி சுமார் 19 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இவர்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நிரூபிக்காவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த அச்சம் இவர்களுக்கு இருந்தது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இதற்கிடையில் அஸ்ஸாம் மாநிலத்தை போல் இந்தியா முழுவதுமே தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் காரணமாக குடியுரிமை பறிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.
மத்திய அரசு பதில்
இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்று உறுதி அளித்துள்ள மத்திய அரசு என்ஆர்சி குறித்து இதுவரை தெளிவான விளக்கம் அளிக்காமல் இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் என்ஆர்சி கொண்டுவரும் திட்டம் மத்திய அரசுக்கு உள்ளதா என நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்து பூர்வாக பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், இப்போது வரை மத்திய அரசு தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை (NRIC) நாடு முழுவதும் நடத்தும் திட்டம் இல்லை என்றார்.
விருப்பம்
முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தும் எந்த ஒரு திட்டம் குறித்தும் இதுவரை அரசு ஆலோசித்தது கிடையாது என்று தெரிவித்தனர். அதேநேரம் அமித்ஷா ஒரு முறை தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இருப்பதாக விருப்பதையும் வெளிப்படுத்தி இருந்தார்.