தேனிலவு கொண்டாடியவர்களால் தான் கேதர்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது: ஸ்வரூபானந்த சரஸ்வதி
மும்பை: கேதர்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டு 5 ஆயிரம் யாத்ரீகர்கள் பலியாக புனித ஸ்தலங்களுக்கு தேனிலவு மற்றும் சுற்றுலா வருபவர்கள் தான் காரணம் என சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத்தில் கடந்த 2013ம் ஆண்டு திடீர் என்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த 5 ஆயிரம் பேர் பலியாகினர். இந்நிலையில் இது குறித்து துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டியின்போது அவர் கூறுகையில்,
ஜாலியாக இருக்க, சுற்றுலாவுக்கு, தேனிலவுக்கு மக்கள் புனிதஸ்தலங்களுக்கு செல்கிறார்கள். இதனால் தான் கேதர்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது. புனித ஸ்தலங்களுக்கு தேனிலவு, சுற்றுலா செல்வதை நிறுத்தாவிட்டால் இது போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நடக்கலாம் என்றார்.
முன்னதாக அவர் சனி பகவான் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தது பற்றி கூறுகையில், சனி பகவான் கோவிலுக்குள் பெண்கள் சென்றதால் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.