உ.பி.: தண்டவாளம் அருகே பிணமாக கிடந்த இளம்ஜோடி- கௌரவக் கொலையா?
முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில் தண்டவாளம் அருகே ஒரு இளம் ஜோடியின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் விவேக் குமார்(22). அவர் அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமையில் இருந்து அவரை காணவில்லை. அவரது பெற்றோரும், உறவினர்களும் அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இந்நிலையில் விவேக் குமார் மற்றும் 20 வயது பெண் ஒருவர் தவ்ராலா ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
விவேக் மற்றும் அந்த பெண் காதலித்திருப்பார்கள் என்று தெரிகிறது. இது கௌரவக் கொலையாக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.