காதல் திருமணம்: அரண்மனை பாணியில் கர்ப்பிணித்தங்கையை சுட்டுக்கொன்ற கொடூர அண்ணன்கள்
சாதி மாறி திருமணம் செய்த பெண்ணை கர்ப்பிணி என்றும் பாராமல் சுட்டுக்கொன்றுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தூர்: சாதி மாறி திருமணம் செய்த காதலர்களை ஆணவக்கொலை செய்யும் சம்பவம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வேறு சாதி பையனை திருமணம் செய்த தங்கையை தலையில் சுட்டுக்கொன்று விட்டு போலீசில் சரணடைந்துள்ளனர் அந்த பெண்ணின் அண்ணன்கள்.
அரண்மனை திரைப்படத்தில் சாதி மாறி ஏழை பையனை திருமணம் செய்து கொண்ட தங்கையை நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் கொன்று புதைப்பார்கள். அதே பாணியில் இந்தூரில் கொடூர ஆணவக்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆணவக்கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் பெயர் புல்புல் என்பதாகும். குல்தீப் ரஜாவத் என்பருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்த நிலையில் இந்த தகவல் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. காதலை எதிர்த்த நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அண்ணன்கள் பழிக்குப் பழி
காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக போகவே, புல்புல் கர்ப்பமானார். அம்மாவை காண புல்புலுக்கு ஆசை ஏற்பட்டது. கணவனிடம் தனது ஆசையை கூறவே, பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்தார் கணவன் குல்தீப். பெற்றோர் வீட்டிற்கு வந்து விருந்து சாப்பிட்டு விட்டு திரும்பிய நிலையில் அவர்களை புல்புல்லின் சகோதரர்கள் பின்தொடர்ந்து வந்தனர்.
கர்ப்பிணி சுட்டுக்கொலை
இருப்பிடத்தை அறிந்து கொண்ட அவர்கள் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் தலையில் சுட்டுக்கொன்றனர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மனைவியைப் பார்த்து குல்தீப் அதிர்ச்சியடைந்தார். காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், புல் புல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கவுரவம் போச்சே
தங்கையைக் கொன்ற புல்புல்லின் சகோதரர்கள் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். எங்களை மீறி வேறு சாதி ஆணை திருமணம் செய்ததால் எங்களின் குலப்பெருமையும் கவுரவமும் சிதைந்து போனது. அவனது வாரிசும் எங்கள் தங்கையின் வயிற்றில் வளர்வதை நாங்கள் விரும்பவில்லை. இதற்காகவே நாங்கள் எங்கள் தங்கையை கொலை செய்தோம் என்று ஆணவத்தோடு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
அதிகரிக்கும் ஆணவக்கொலை
தமிழ்நாட்டில் சாதி மாறி திருமணம் செய்த பல பெண்கள் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் கணவர்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஆந்திராவில் காதல் திருமணம் செய்த பெண்ணின் கணவரை நடுரோட்டில் ஓட ஓட வெட்டினர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கர்ப்பிணிப்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.