"கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கான நீதியை மோடி அரசு பெற்றுத் தரும்"..ஒரு மாவீரரின் தந்தை
-ரிச்சா பாஜ்பாய்
கார்கில்: பாகிஸ்தான் ஆக்கிரமித்த கார்கிலை மீட்பதற்காக போரிட்டு வீரமரணடைந்த இந்திய வீரர்களுக்கான நீதியை தற்போதைய மோடி அரசாவது பெற்றுத் தரும் என நம்புவதாக மாவீரர் கேப்டன் விஜயந்த் தாப்பரின் தந்தை கர்னல் தாப்பர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கார்கில் போரின் வெற்றித் திருநாளான ஜூலை 26-ந் தேதியன்று ஆண்டு தோறும் தனது மகன் தேசத்துக்காக வீரமரணம் எய்திய கார்கில் பகுதிக்கு சென்று வீரவணக்கம் செலுத்தி வருகிறார் கர்னல் தாப்பர். இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகளாகப் பணிபுரிந்தவர் கர்னல் தாப்பர்.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா பயன்படுத்திய முதன்மையான டாங்கியின் பெயர் விஜயந்தா. இது முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இதன் நினைவாகத்தான் மகனுக்கு விஜயந்த் என்று பெயர் சூட்டியிருக்கிறார் கர்னல் தாப்பர்.
தமது மகனின் தியாகம் பற்றி..
"என் மகனுக்கு 22 வயதுதான் ஆகி இருந்தது.. அந்த இளம்வயதிலேயே தேசத்துக்காக தன் உயிரை தியாகம் செய்தான். தாய்நாட்டுக்காக அவன் உயிரை தியாகம் செய்ததை பெருமையாகவே கருதுகிறேன்.. நான் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மாவீரனின் தந்தை என்று உணரும் தருணம் மிகவும் கவுரவமானது.. பெருமையானது" என்கிறார் கர்னல் தாப்பர்.
நாட்டின் ராணுவம் குறித்து..
நமது நாட்டின் ராணுவ கட்டமைப்பு பற்றி கர்னல் தாப்பர் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே நிலைமைதான் இப்போதும் இருக்கிறது.. ராணுவத்தை நவீனமயமாக்க வேண்டிய உடனடி தேவை இருக்கிறது. 30 ஆண்டுகள் பழமையான.. அதே போபர்ஸ் பீரங்கிகளைத்தான் இன்னமும் நாம் பயன்படுத்துகிறோம். நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தளவாடங்கள்தான் நமக்கு அவசியம்" என்கிறார்.
பாகிஸ்தான்...
"பாகிஸ்தானில் பல அதிகார மையங்கள் இருக்கின்றன.. இந்த நிலைமை ஒருபோதும் மாறப்போவதில்லை.. இதனாலேயே யுத்த நிறுத்த மீறல்கள் நிகழ்கின்றன.. யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுகிற போதெல்லாம் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழாதவாறு நமது இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பற்றி கூறுகிறார் கர்னல் தாப்பர்.
தற்போதைய அரசு..
இந்த பேட்டியின் முடிவாக, பாகிஸ்தானால் படுகொலை செய்யப்பட்ட கேப்டன் சவுரவ் காலியா உள்ளிட்ட ஜவான்களின் மரணத்துக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்.. அதை போர்க்குற்ற நடவடிக்கையாக எழுப்ப வேண்டும் என்கிறார் கர்னல் தாப்பர்.
சவுரவ் காலியா
கார்கில் போரின் தொடக்கத்தில் கேப்டன் சவுரவ் காலியா உட்பட 5 ராணுவ வீரர்களை கைது செய்த பாகிஸ்தான் அவர்களை மிகக் கொடூரமாக சித்திரவதை செய்து படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது